இந்திய மாநிலத்தில் தேர்வறைக்கு செல்ல தாலியை கழற்ற சொன்ன கொடூரம்!

தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் வித்யார்த்தி ஜூனியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தெலங்கானா அரசுத் தேர்வு வாரியம் (டிஎஸ்பிஎஸ்சி)நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு இந்தக் கல்லூரியும் ஒரு தேர்வு மையமாக இருந்தது. இங்கு நூற்றுக்கணக்கான தேர்வர்கள் நேற்று காலை வந்தனர். அப்போது தேர்வறைகளுக்கு வெளியே இருந்த போலீஸ் அதிகாரிகள், அங்கு வந்த பெண்களிடம் அவர்கள் அணிந்திருந்த நெக்லஸ்கள், வளையல்கள் ஆகியவற்றை கழட்டி வைத்துவிட்டு தேர்வறைக்கு உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினர்.
    
அதன்படி, அனைத்தையும் கழட்டி வைத்த பெண்கள் தாலியை மட்டும் கழட்டாமல் இருந்தனர். ஆனால், தாலியையும் கழட்டி வைத்தால்தான் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பெண்கள், வேறு வழியின்றி தங்கள் தாலிகளை கழட்டி வைத்துவிட்டு தேர்வு எழுதினர்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அடிலாபாத் எஸ்.பி. உதய்குமார் ரெட்டி, “தேர்வு எழுத வந்த பெண்களிடம் தாலியை கழட்டுமாறு போலீசார் கூறியது உண்மைதான். இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது.

சரியான புரிதல் இல்லாமல் போலீசார் இவ்வாறு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார். இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து தெலங்கானா பா.ஜ.க. மூத்த தலைவர் பிரீத்தி காந்தி கூறும்போது சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தும் அரசியலில் டிஆர்எஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது என்பதற்கு இதுவே சிறந்த சான்று.

உடலையே மூடிக்கொள்ளும் புர்கா உடையை அனுமதிப்பார்களாம். ஆனால், கழுத்தில் மெல்லியதாக இருக்கும் தாலியை அனுமதிக்க மாட்டார்களாம். இது என்ன மாதிரியான அரசியல்? இந்து பெண்களை இழிவுப்படுத்தியதற்காக முதல் மந்திரி சந்திரசேகர ராவ் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!