100 சிறார்களின் உயிரை பறித்த இந்திய மருந்தை மொத்தமாக தடை செய்த இரண்டாவது நாடு!

இந்தோனேசியாவில் இருமல் மருந்து காரணமாக 99 குழந்தைகள் பரிதாபமாக பலியான சம்பவத்தை அடுத்து, குறித்த மருந்துகளுக்கு மொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. காம்பியாவில் இருமல் மருந்து காரணமாக கிட்டத்தட்ட 70 குழந்தைகள் இறந்ததாக தகவல் வெளியான சில வாரங்களில் இந்தோனேசியாவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சிறுநீரகத்தை மொத்தமாக பாதிக்கும் அம்சம் அந்த மருந்துகளில் கலந்திருப்பது கண்டறியப்பட்டதாகவும், இதுவே 99 குழந்தைகள் இறப்புக்கு காரணமாகியுள்ளது எனவும் இந்தோனேசியா அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இதுவரை 200 குழந்தைகள் சிறுநீரக பாதிப்பால் அவதிக்குள்ளானது கண்டறியப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலானவர்கள் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில், காம்பியாவில் கிட்டத்தட்ட 70 குழந்தைகளின் இறப்புக்கு காரணமான நான்கு இருமல் மருந்துகள் குறித்து உலக சுகாதார அமைப்பு உலகளாவிய எச்சரிக்கையை வெளியிட்டது.

குறித்த இருமல் மருந்துகள் இந்திய நிறுவனம் ஒன்றால் தயாரிக்கப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது. காம்பியாவில் சிறார்களின் மரணத்திற்கு காரணமான மருந்தில் காணப்பட்ட அதே ரசாயனங்களே இந்தோனேசியாவிலும் காணப்பட்டதாக சுகாதார அமைச்சர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஆனால், காம்பியாவில் பயன்படுத்தப்படும் இருமல் மருந்து உள்நாட்டில் விற்கப்படவில்லை என்று இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, தொடர்புடைய மருந்தால் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை வெளியானதைவிட மிக அதிகமாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

இருப்பினும், தொடர்புடைய மருந்துகள் எந்த நிறுவனம் தயாரித்தது உள்ளிட்ட தகவல்களை இந்தோனேசியா நிர்வாகம் வெளியிட மறுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!