கொழும்பில் போராட்ட களத்தில் கடும் பதற்றம்! ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி நகரும் கலகத்தடுப்பு பிரிவு, பொலிஸார்

கொழும்பு பௌத்தாலோக பகுதியில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் பகுதியில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.ஆர்ப்பாட்டத்தினை தடுப்பதற்காக கலகத்தடுப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள், ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போரை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்நோக்கி நகர்ந்து வருகின்றனர். 
ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி வந்த பொலிஸார் பம்பலப்பிட்டி பகுதியில் நின்றுள்ளதையடுத்து அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடல் பகுதியை நோக்கி விரைந்துள்ளதாக தெரியவருகிறது. 

கொழும்பு – பௌத்தாலோகமாவத்தையில் அமைந்துள்ள இலங்கைக்கான ஐ.நா காரியாலயத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரின் விடுதலையை வலியுறுத்தியும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் உள்ளிட்ட பலர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பொலிஸார் குவிப்பு

அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
அத்துடன் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என பொலிஸார் அறிவுத்தியுள்ள போதும், அதனை மீறி போராட்டம் தொடர்ந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இந்த நிலையில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கு ஆயத்தம் செய்துள்ள நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலை நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 
மேலும் போராட்டம் இடம்பெறும் பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாருடன் போராட்டக்காரர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு வருவதுடன், தமக்கு பொலிஸாரின் ஆதரவு தேவை எனவும் கோரி வருகின்றனர். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!