ஒரே நேரத்தில் மூன்று விடயங்களை பரிசீலிக்க அரசாங்கம் இணக்கம்!

ஒரே நேரத்தில் மூன்று விடயங்களை பரிசீலிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    
“பல தமிழ் கட்சிகளினுடைய தலைவர்கள், சிங்கள – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் என எல்லோரும் இந்த கூட்டத்தில் பிரசன்னமாகியிருந்தோம். 75ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப் பிரச்சினைகளை தீர்ப்பது சம்பந்தமாக ஒரு முடிவுக்கு வரவேண்டும். இதனை எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் எங்களிடம் ஜனாதிபதி கேட்டிருந்தார். நாம் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, நில அபகரிப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளை எடுத்துக் கூறினோம்.

வடக்கு கிழக்கிலிருக்கும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை உடனே தீர்க்க வேண்டும் என்பது எமது முதலாவது கோரிக்கையாக இருந்தது. இரண்டாவது சட்டத்தின் வாயிலாக ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை நாங்கள் பெறக்கூடிய விதத்தில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதாவது 13ஆவது திருத்தச் சட்ட நடைமுறை, அதற்கமைவான மாகாண சபைகள் இயக்கம்.

அடுத்ததாக இதுவரை காலமும் பலவிதமான ஆவணங்களை நாம் தயாரித்திருக்கின்றோம். தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை தீர்ப்பது சம்பந்தமாக – எவ்வாறு அவற்றை முன்வைத்து அவற்றைப் படித்து பார்த்து, எவ்வாறான ஒரு தீர்வை அரசியல் யாப்பு மூலம் கொண்டு வரலாம் என்பது சம்பந்தமாகவும் நாங்கள் பேசி ஒரு முடிவுக்கு வரலாமா என்பது தொடர்பாகவும் ஒரு ஒரு தீர்வுக்கு வந்திருக்கின்றோம். அடிப்படையிலே நாங்கள் இந்த மூன்று விடயங்களையும் சம நேரத்தில் பரிசீலிக்க இருக்கின்றோம். அதற்கு அரசாங்கம் சரி என்று கூறி இருக்கிறது” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!