“அண்ணனை யாராலும் வாங்கமுடியாது” – பிரியங்கா காந்தி புகழாரம்!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக கடந்த 24-ம் தேதி டெல்லியை சென்றடைந்தது. பின்னர், கடந்த 24-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் ராகுல்காந்தி உரையாற்றிய பின் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி பாரத் ஜோடோ யாத்திரை ஒத்திவைக்கப்பட்டது.
    
இதனையடுத்து, பாரத் ஜோடோ யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது. டெல்லியில் தொடங்கிய யாத்திரை தற்போது உத்தரபிரதேச மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. இந்த யாத்திரையில் இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் தலைவர் அமர்ஜித் சிங் துலெட் இன்று பங்கேற்றார். இந்நிலையில், டெல்லியில் இருந்து யாத்திரை உத்தரபிரதேசத்திற்குள் நுழைந்தது. அப்போது, உத்தரபிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராக உள்ள பிரியங்கா காந்தி யாத்திரையை வரவேற்றார்.

உத்தரபிரதேசத்தின் லோனி பகுதியில் ராகுல்காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற பிரியங்கா காந்தி அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், உத்தரபிரதேசத்திற்குள் பாரத் ஜோடோ யாத்திரையை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 3 ஆயிரம் கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்ட பின் யாத்திரை உத்தரபிரதேசம் நுழைந்துள்ளது. அன்பான மூத்த அண்ணா உன்னை நினைத்து நான் பெருமைபடுகிறேன்.

உனக்கு எதிராக அனைத்து சக்திகளும் முயற்சிக்கப்பட்டுள்ளன. உங்கள் நற்பெயரை அளிக்க மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது. ஆனால், நீங்கள் பின்வாங்கவில்லை. அதானியும், அம்பானியும் தலைவர்களை விலைக்கு வாங்குகின்றனர். பொதுநிறுவனங்களை வாங்கிவருகின்றனர். ஊடகத்தை வாங்கிவருகின்றனர். ஆனால், எனது அண்ணனை அவர்களால் வாங்க முடியவில்லை. அவரை யாராலும் வாங்கவும் முடியாது. என் அண்ணனை நினைத்து நான் பெருமைபடுகிறேன்’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!