மேலும் ஒரு உயிரை பறித்த ஆன்லைன் ரம்மி!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பெணுமூரூ, அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ஜானகிராம். (வயது 30). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ஜானகிராம் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். ஆன்லைன் விளையாட்டுக்காக தனது உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கடன் வாங்கினார்.
    
மேலும் ஆன்லைன் ஆப் மூலம் ரூ.80 ஆயிரம் கடன் வாங்கினார். ஆன்லைனில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டுமென ஜானகிராமுக்கு நெருக்கடி அதிகரித்து வந்தது. மேலும் கடன் கொடுத்தவர்கள் மிரட்டத் தொடங்கினர். இதனால் மன உளைச்சல் அடைந்த ஜானகிராம் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜானகிராம் உடலை மீட்டு அவரது சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு கடிதத்தை பறிமுதல் செய்தனர். அதில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை அம்மா, அண்ணா, அண்ணி என்னை மன்னித்து விடுங்கள் என உருக்கமாக எழுதியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!