இந்திய கடலோர நகரங்களுக்கு ஆபத்து!

இன்றைய நவீன யுகத்தில் தொழிற்சாலைகள் பெருகியது, காடுகளை அழித்தது, நீர்நிலை அழித்தல் போன்ற காரணங்களால் பூமி இயல்பை விட வேகமாக வெப்பமடைகிறது. இதனால் பனிப்பாறைகள் நாம் முன்பு கணித்ததை விட அதிகமாக உருகுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன் கடற்கரையோர நகரங்கள் நேரில் மூழ்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. கடல் நீர் மட்டம் உயர்வு என்பது உலகெங்கிலும் உள்ள கடலோர நகரங்கள் மற்றும் கடல்களால் சூழப்பட்ட தீவுகளுக்கு நேரடி அச்சுறுத்தல்கள் ஆகும்.
    
2006 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் கடல் மட்டம் உயரும் விகிதம் 20-ம் நூற்றாண்டை விட 2.5 மடங்கு வேகமாக இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 2013 முதல் 2022 வரை கடல் மட்டம் ஆண்டுக்கு சராசரியாக 4.5 மில்லி மீட்டர் உயர்ந்துள்ளது. இது உலகிற்கு ஏற்படப் போகும் ஆபத்தை நேரடியாக குறிக்கிறது. இந்திய மற்றும் சீன கடலோர நகரங்கள் மோசமாக பாதிக்கப்படும் என்று காலநிலை அறிக்கைகள் கூறுகிறது. அந்த வகையில் 50 முக்கிய இந்திய கடலோர நகரங்கள் கடல் மட்டம் உயர்வதை தடுக்கும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.

மகாராஷ்டிரா, கோவா, குஜராத், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் உள்ள சில இந்திய நகரங்களில் 2030க்குள் ஆபத்தான நிலை ஏற்படலாம் என்று ஆய்வு கூறுகிறது. காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையேயான குழுவின் ஐபிசிசி மற்றொரு ஆய்வறிக்கை மும்பை, சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 12 கடலோர நகரங்கள் நூற்றாண்டில் இறுதியில் கிட்டத்தட்ட மூன்று அடிக்கு அடியில் இருக்கும் என்று கூறுகிறது.

உலக சராசரி விகிதத்தை விட மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய பிராந்திய உலகளாவிய கடல்மட்ட உயர்வு மிக வேகமாக உள்ளது என்றும் ஐபிசிசி அறிக்கை கூறுகிறது. புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி குறைந்தால் கூட ஆழ்கடல் வெப்பமயமாதல் மற்றும் பனிக்கட்டி உருகுவதால் கடல் மட்டம் பல நூற்றாண்டுக்கு உயரும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே உலக நாடுகள் அனைத்தும் இது குறித்து உறுதியான முடிவை விரைவில் எடுக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!