இந்தியா மாநிலத்தை குறிவைக்கும் ஆப்பிள் நிறுவனம்!


கர்நாடகாவில் 300 ஏக்கர் பரப்பளவில் அமையும் தொழிற்சாலையில் ஐபோன்கள் தயாரிக்கப்பட உள்ளதாக, மத்திய தகவல் இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் அறிவித்துள்ளனர். இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். இதற்காக ஐபோன்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
    
உள்ளூரில் உற்பத்தியை துவக்க, இந்த தொழிற்சாலையில் 700 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் திட்டத்தில் தைவானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் ஆப்பிள் உதிரிபாகங்களையும் தயாரிக்கவும், தனது மற்றுமொரு தயாரிப்பான மின்னணு வாகனங்களுக்கான உதிரி பாகங்களையும் இங்கு தயாரிக்க பாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொழிற்சாலை அமையும் இடத்தை பார்வையிட வந்த பாக்ஸ்கான் நிறுவனத்தின் குழுவினர் கூறுகையில், சர்வதேச நிறுவனங்களின் முதன்மையான தேர்வாக பெங்களூரு நகரம் உள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னணியில் உள்ளது என தெரிவித்துள்ளனர். இந்த குழுவினர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிள் போன்கள் தயாரிக்க அமைக்கப்படும் மிகப்பெரிய தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும். சமீபத்தில் ஓசூரிலும் ஆப்பிள் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
   

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!