வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த பெண்: கொலையாளியை காட்டிக்கொடுத்த கிளி!

கொலை செய்த குற்றவாளியின் பெயரை பாதிக்கப்பட்டவரின் வீட்டில் உள்ள செல்லப் பிராணியான கிளி தொடர்ந்து உச்சரித்ததை தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு பிப்ரவரி 20 திகதி பத்திரிகையாளரும் ஆசிரியருமான விஜய் சர்மாவின் மனைவி நீலம் சர்மா அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மகன் ராஜேஷ் மற்றும் மகள் நிவேதிதாவுடன் கணவர் விஜய் சென்ற பிறகு, மனைவி நீலம் வீட்டில் தனியாக தங்கியுள்ளார்.
    
இதையடுத்து அன்றிரவே அவர்கள் வீடு திரும்பிய நிலையில், மனைவி நீலம் மற்றும் அவர்களின் வளர்ப்பு நாய் ஒன்றும் கூரிய பொருட்களால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறிது நேரத்திலேயே பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், நேரில் பார்த்த சாட்சிகள் இல்லாததால் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் பொலிஸாருக்கு சிரமம் ஏற்பட்டது.

இதற்கிடையில் நீலம் சர்மா செல்லமாக வளர்த்த கிளி, அவர்களது மருமகன் ஆஷு-யின் பெயரை ஆஷு, ஆஷு என விடாமல் கத்திக் கொண்டே இருந்தது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மருமகன் ஆஷு-யிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், நீலம் சர்மாவை கொலை செய்த குற்றத்தை ஆஷு ஒப்புக் கொண்டார். அத்துடன் இந்த கொடூரமான கொலைக்கு நண்பர் ரோனி மாஸ்ஸியிடமிருந்து உதவி பெற்றுக் கொண்டதையும் ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில் மருமகன் ஆஷு மற்றும் நண்பர் மாஸ்ஸி இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.72,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நடந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு கிளி உயிரிழந்தது, மற்றும் கணவர் விஜய் சர்மா நவம்பர் 14, 2020 அன்று உயிரிழந்தார். மகள் நிவேதிதாவின் கூற்றுப்படி, ஆஷு சில வருடங்கள் அந்த வீட்டில் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!