கைது செய்யும் வரை போராட்டம் தொடரும்: மல்யுத்த வீராங்கனைகள் உறுதி!

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டிய இந்திய முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுட்டனர். பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர்.
    
3 நாள் நீடித்த போராட்டத்தை பேச்சுவார்த்தையில் முடிவுக்கு கொண்டு வந்த மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட மேற்பார்வை கமிட்டியை அமைத்தார். விசாரணை முடியும் வரை தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷனை ஒதுங்கி இருக்கவும் உத்தரவிட்டார். தனது மீதான புகார்களை திட்டவட்டமாக மறுத்த பிரிஜ் பூஷன் தலைவர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்று கூறினார். அதே சமயம் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடமாட்டேன் என்றும் அறிவித்தார்.

பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளிடம் விசாரணை நடத்திய 6 பேர் கமிட்டி விசாரணை அறிக்கையை சமீபத்தில் மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கை விவரத்தை விளையாட்டு அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இன்னும் எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மலியுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் கடந்த 23-ம் தேதி முதல் போராட்டத்தில் குதித்தனர். இதனை தொடர்ந்து, இந்திய மல்யுத்த சம்மேள தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி கடந்த 24-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்பட 8 மல்யுத்த வீரர் வீராங்கனைகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு மனு மீது இன்று விசாரணை நடத்தியது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் டெல்லி போலீஸ் தரப்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேள தலைவர் பிரிஜ் பூஷன் சரண் மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்படும்’ என்று உறுதியளித்தார்.

இந்நிலையில், பிரிஜ் பூஷன் சரண் மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் டெல்லி போலீசார் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது குறித்தும், போராட்டத்தை வாபஸ் பெறுவீர்களா? என்பது குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீரர், வீராங்கனைகளிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள், நாங்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதிக்கிறோம்.

ஆனால், டெல்லி போலீஸ் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. இது வழக்குப்பதிவு செய்தவற்கான போராட்டமல்ல. இதுபோன்ற நபர்களை தண்டிப்பதற்கான போராட்டம். பிரிஜ் பூஷனின் பதவி பறிக்கப்படவேண்டும். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்’ என்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!