புலிகளை வைத்து தெற்கில் பிரசாரத்துக்கு தயாராகும் கோத்தா தரப்பு!

விடுதலைப் புலிகளின் மீள்உருவாக்கம் தொடர்பாக தென்னிலங்கையில் தீவிர பிரச்சாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயற்பாட்டை கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமான ஹெல ஜாதிக பலமுழுவ என்ற பெயரில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த அமைப்பின் கூட்டம் ஒன்று கோட்டை லோட்டர்ஸ் விகாரையில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கூட்டத்திற்காக முன்னாள் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, முன்னாள் ரியாத் அட்மிரல் சரத் வீரசேகர, முன்னாள் விமான தளபதி ரொஷான் குணதிலக்க மற்றும் எல்ல குணவன்ஷ தேரர் உட்பட குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் ஹெல ஜாதிக்க பலமுழுவ முக்கிய 4 விடயங்களை நோக்கமாக கொண்டு செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.விடுதலை புலிகள் அமைப்பினால் மீண்டும் அச்சுறுத்தல் உள்ளதாக பிரச்சாரம் செய்தல், இராணுவத்தினரை கைது செய்தலை எதிர்த்தல், ஊனமுற்ற இராணுவத்தினரின் உரிமைக்காக முன் வருதல் மற்றும் நாட்டிற்கு உரிய தலைவர் நியமிக்கப்படுதல் போன்ற முக்கிய விடயங்களை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹெல ஜாதிக்க பலமுழுவ, நாட்டின் பல பகுதிகளில் தங்கள் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கு சரத் வீரசேகர மற்றும் கமல் குணரத்ன ஆகியோரின் தலைமையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறான சர்ச்சைக்குரிய கூட்டங்கள் அனுராதபுரம் மற்றும் மாத்தளை ஆகிய பகுதியிலும் இடம்பெற்றதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!