முதலமைச்சர் வேட்பாளரை தமிழரசுக் கட்சியே முன்னிறுத்தும்! – என்கிறார் சிவிகே

தமிழரசுக் கட்சியே முதலமைச்சர் வேட்பாளராக ஒருவரை முன்நிறுத்தும் என்பதில் தெளிவாக இருப்பதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“தேர்தலுக்கு முன்னர் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் பேசுவதுண்டு. சில சமயங்களில் அவ்வாறாக பேசியவர்கள் தோற்றதும் உண்டு. ஆனபடியால் இவ்வாறு பேசப்படுவது ஒரு அர்த்தமான விடயமானாலும் பேசப்படுவதும் உண்மை தான். ஒருவகையில் தற்போதைய முதலமைச்சருடைய பெயரும் பேசப்படுகின்றது. தமிழரசுக் கட்சி சார்ந்தவர்கள் தங்களுடைய கட்சி சார்ந்த அதாவது கூட்டமைப்பினுடைய பங்காளிக் கட்சிகளில் பிரதான கட்சி என்ற வகையில் தமிழரசுக் கட்சியினுடைய ஒருவர் அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட தன்மையுடைய ஒருவராக இருக்க வேண்டுமென்று ஒரு பொதுப்படைத் தன்மையான தீர்மானத்தையும் இயற்றியுள்ளனர். ஏனைய பங்காளிக் கட்சிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளன.

கடந்த முறையும் மாவை சேனாதிராஜாவுடைய பெயர் பிரேரிக்கப்பட்டது. பின்னர் சூழ்நிலையால் அவர் அதனை விட்டுக்கொடுத்து நீதியரசர் விக்னேஸ்வரன் கொண்டு வரப்பட்டார். இப்போது தெளிவாகத் தெரிகிறது தமிழரசுக் கட்சி தன்னுடைய வேட்பாளர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தும் என்பது. அது யாரென்பது தற்போது தெரியவில்லை. கட்சி கூடித்தான் முடிவு எடுக்கப்படும். முதலமைச்சரும் தனித்தோ அல்லது வேறு நபர்களுடன் இணைந்து கூட்டமைப்பாகவோ தேர்தலில் நிற்கக் கூடும். இதிலும் தற்போது தளம்பல் நிலையே காணப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!