பெற்ற தாயை கொன்றவரை 4 ஆண்டுகள் காத்திருந்து பழி தீர்த்த மகன்: – பரபரப்பு சம்பவம்

தமிழகத்தில் தனது தாயை கொலை செய்த நபரை, நான்கு ஆண்டுகள் கழித்து அவரது மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த பெண் ரமணி. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பணத் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சங்கர சுப்பிரமணியம் என்பவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், 2015ஆம் ஆண்டில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், நேற்று மலையப்பட்டி பகுதியில் சாலையில் தனது தாயாருடன் ஆட்டோவில் சென்ற சுப்பிரமணியத்தை, அடையாளம் தெரியாத நபர்கள் வழி மறித்தனர். அதன் பின்னர், 7 பேர் கொண்ட அந்த கும்பல் சுப்பிரமணியத்தை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த ராஜபாளையம் பொலிசார், சுப்பிரமணியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து 6 பேரை பிடித்து பொலிசார் விசாரித்ததில், கடந்த 2014ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ரமணியின் மகன் ரெங்கராஜன் தான் இந்த கொலையை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.

தனது தாயின் மரணத்திற்கு காரணமான சுப்பிரமணியத்தை பழிவாங்க, கடந்த 3 ஆண்டுகளாக திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி தற்போது ரெங்கராஜன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சுப்பிரமணியத்தை கொலை செய்துள்ளார். இந்நிலையில், ரெங்கராஜன் உட்பட 6 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான மற்றொரு நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!