மூன்று உயிர்களை காவு வாங்கிய வரதட்சணை கொடுமை!


இந்திய மாநிலம் தெலங்கானாவில் பெண்ணொருவர், இரட்டைக் குழந்தைகளுடன் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (30). இவர் முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார்.
    
இவர் தனது மனைவி சவுந்தர்யா (27) மற்றும் பிள்ளைகள் நித்யா, நிதர்ஸ் உடன் பன்சிலால்பேட் பகுதியில் வசித்து வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ் – சவுந்தர்யாவுக்கு திருமணம் நடந்துள்ளது. கணேஷ் தனது மனைவியை அடிக்கடி வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சவுந்தர்யா தனது பிள்ளைகளுடன் தன் தாயார் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்று தங்கியுள்ளார்.

நேற்றைய தினம் மாலை வேளையில், அடுக்குமாடி குடியிருப்பின் உச்சி சென்ற சவுந்தர்யா தனது இரு பிள்ளைகளையும் அங்கிருந்து தூக்கி வீசியுள்ளார். அதன் பின்னர் தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சவுந்தர்யா மற்றும் அவரது பிள்ளைகளின் உடல்களை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், வரதட்சணை கொடுமையால் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பதை விசாரணையில் அறிந்து, கணவர் கணேஷை கைது செய்தனர்.
   

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!