சீனாவில் கூழாங்கற்களை உணவாக உண்ணும் மக்கள்!

சீனாவில் கூழாங்கற்களை சமைத்து உணவாக விற்பனை செய்யும் சாலையோர கடை ஒன்றின் வீடியோ சமூக வலைதளத்தில் அதிக கவனம் ஈர்த்துள்ளது. சீன உணவு வகைகள் எப்போதுமே மற்ற உலக நாடுகளை ஒப்பிடும் போது புதுமையானதாகவும், விசித்திரமான பல்வேறு விஷயங்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.
    
அந்த வகையில் சீனாவின் சாலையோர கடை ஒன்றில் கூழாங்கற்களை பூண்டு, மிளகாய் மற்றும் மசாலா திரவம் ஆகியவற்றுடன் சேர்த்து சமைத்து மக்களுக்கு உணவாக விற்பனை செய்து வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த உணவுக்கு பெயர் சொடியு (Suodiu) என அழைக்கப்படுகிறது, இது சீனாவின் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

நூற்றாண்டுகளுக்கு முன்பு சீனாவின் ஹீபே நிலத்தில் வாழ்ந்த மக்கள் யாங்சே ஆற்றின் வழியாக பயணம் செய்த போது அவர்கள் வைத்து இருந்த காய்கறிகள் மற்றும் இறைச்சிகள் போன்ற உணவு தீர்ந்து விட்டதாம். அப்போது அந்த மக்கள் கனிம சத்துக்கள் நிறைந்த கூழாங்கற்களை சமைத்து உணவாக உட்கொண்டு இருப்பதாக வரலாற்று விளக்கங்கள் இந்த கல் உணவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த சொடியு உணவின் விலை 16 யுவான் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 181.34 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆயிரம் தான் கூழாங்கற்களை உணவு என்று விற்பனை செய்தாலும் அதனை மக்கள் சுவைத்து விட்டு வெளியே துப்பவே செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சீனாவின் கூழாங்கற்கள் உணவு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி கிட்டத்தட்ட 8,00,000 பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. அதில் ஒரு பார்வையாளர், நதியில் உள்ள கூழாங்கற்களில் இயற்கையாகவே மீன் சுவை இருக்கும் அதில் மசாலா சேர்த்து வெப்பப்படுத்தும் போது சுவை இன்னும் கூடுவதாக கமெண்ட் செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!