வடக்கு -கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்வாங்கப்படாமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரிகளை கடிந்து கொண்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட, வடக்கு – கிழக்கைப் பிரதி நித்துவப்படுத்தும் அரசியல் தரப்புக்களை செயலணியில் உள்வாங்குமாறு அவர் ஆலோசனை உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கான சிறப்புச் செயலணியின் முதலாவது கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்படாமை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
செயலணி உறுப்பினர்களாக அவர்களது பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை என்று ஜனாதிபதியின் அதிகாரிகள் குழாமைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளார்கள். கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களையும் உள்ளடக்குமாறுதானே பணித்தேன் என்று, அவரது அதிகாரிகள் குழாமைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஜனாதிபதி கடும் தொனியில் கூறியுள்ளார்.
வடக்கு – கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் அந்த மாகாணங்களைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கவேண்டும். சகல அரசியல்தரப்புக்களையும் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் பணித்துள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!