இன்ஸ்டாவில் பழகிய மாணவரை திட்டமிட்டு கடத்திய சிறுமி!

பீகாரில் கயா நகரில் வசித்து வரும் மாணவர் ரிஷப். ஜே.இ.இ. பொறியியல் தேர்வுக்கு தயாராகி வந்து உள்ளார். சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் மைனர் சிறுமி ஒருவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் 26-ந்தேதி நேரில் வந்து சந்திக்கும்படி அந்த சிறுமி, மாணவரிடம் கூறியுள்ளார். ஆனால், அப்போது மாணவரால் போக முடியவில்லை. பின்னர் கடந்த 30-ந்தேதி நண்பனை அழைத்து கொண்டு சிறுமியை காண ஆவலாக சென்று உள்ளார்.
    
சிறுமியை பார்த்ததும், நண்பரை திரும்பி போகும்படி கூறியுள்ளார். ஆனால், அதன்பின்னரே அந்த சிறுமியின் உண்மையான முகம் வெளிப்பட்டது. அந்த சிறுமி 3 பேருடன் சேர்ந்து, அந்த மாணவரை கடத்தி சென்று உள்ளார்.

இதன்பின், மாணவரின் குடும்பத்தினரிடம் ரூ.50 லட்சம் பணம் கேட்டு மைனர் சிறுமி மிரட்டி உள்ளார். பணம் தரவில்லை எனில், மாணவரை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்து உள்ளார்.

பணத்துடன் வரவேண்டிய இடம் பற்றி கேட்டதும் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்பு, சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதனால், போலீசாரிடம் அவர்கள் தெரிவித்து உள்ளனர். மாணவரின் நண்பரிடம் போலீசார் விசாரித்தனர். பின்பு, மாணவரின் செல்போன் உரையாடல்களை போலீசார் ஆய்வு செய்து உள்ளனர்.

போலீசாரின் சிறப்பு விசாரணை குழுவினர் பாட்னா நகரில் சிறுமியை கைது செய்தனர். விசாரணையில் அந்த சிறுமி மைனர் என தெரிய வந்தது. அவருடன் கடத்தலுக்கு உதவிய 3 நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!