தனது தற்கொலையை பேஸ்புக்கில் நேரலையாக பதிவு செய்த இளைஞன்

டெல்லியை சேர்ந்த ஒரு இளைஞன் தனது தற்கொலையை பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பிய காணொளியை பார்த்த 2300 பேரில் ஒருவர் கூட குறித்த இளைஞனை காப்பற்ற முன்வராதது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் டெல்லி புறநகர் பகுதியில் உள்ள குருகிராம் நகரில் வசித்தவர் அமித்சவுகான். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன, 27 வயதான அமித்சவுகானுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு. நேற்று முன்தினம் மாலை இருவருக்கும் வழக்கம் போல் சண்டை ஏற்பட்டது.

அமித்சவுகான் கடுமையாக திட்டியதால் அவரது மனைவி கடும் கோபம் அடைந்ததோடு. தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

மனைவியின் செயற்பாடு அமித்சவுகானுக்கு மிகுந்த விரக்தியை கொடுத்தது. அன்று இரவு 7 மணி அளவில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தனது தற்கொலையை பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பு செய்யவும் தீர்மானித்தார். அதற்கேற்ப புகைப்படக் கருவியை அவர் சரியான கோணத்தில் வைத்ததன் பிறகு மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அமித்சவுகான் தூக்குப்போட்டு தற்கொலை செய்தததை பேஸ்புக்கில் சுமார் 2000 பேர் நேரிடையாக பார்த்தனர். ஆனால் ஒருவர்கூட அவரது தற்கொலையை தடுத்து நிறுத்த முயற்சி செய்யவில்லை.

பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பை பார்த்தவர்கள் பொலிஸாருக்கோ அல்லது குறித்த இளைஞனின் உறவினர்களுக்கோ தகவல் தெரிவித்திருந்தால் இந்த தற்கொலையை தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!