வடக்கில் குண்டர்களால் பௌத்த உரிமைகள் நாசமாக்கப்படுகிறதாம்!

பாராளுமன்றத்தில் வைத்து நீதிமன்றத்தை அச்சுறுத்தியதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.
    
பாராளுமன்றத்துக்குள் நடந்துக்கொள்ளும் முறைமை தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குண்டர்களால் பௌத்த உரிமை நாசமாக்கப்படுகின்றது. அவற்றை வடக்குக்குச் சென்று பார்த்துவருமாறு சட்டத்தரணிகள் சங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பௌத்த உரிமை நாசமாக்கும் பிரிவினைவாத குண்டர்களுக்காக முன்னிலையாகுவதற்கு முன்னர் இரண்டொரு தடவைகள் சிந்தித்துப் பார்க்குமாறும் சட்டத்தரணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
“நாங்கள் அனைவரும் நீதிமன்றத்தை மதிக்கிறோம்” என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரன் உயர் நீதிமன்றம் தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா அவருக்குப் பயந்து தானா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்

இலங்கையின் நீதித்துறை குறித்து வெளியிடப்பட்ட அவமானகரமான மற்றும் அருவருப்பான அறிக்கைகள் தொடர்பில் தானாக முன்வந்து ஜெனிவா சென்று கண்டித்ததாகவும் சரத் வீரசேகர அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!