சமூக வலைத்தளத்தால் வந்த வினை: தங்கையை உலக்கையால் அடித்துக்கொன்ற இளைஞர்!

இந்திய மாநிலம் தெலங்கானாவில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டதால் தங்கையை அவரது அண்ணன் உலக்கையால் தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜ்மிரா சிந்து (21). இவர் அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார்.
    
தன்னுடைய வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார். ஆனால் இது அவரது 22 வயது சகோதரர் (அண்ணன்) ஹரிலால் கண்டித்தார். சிலமுறை தங்கையிடம் இதுபோன்று வீடியோக்களை பதிவிட வேண்டாம் என அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

எனினும் அஜ்மிரா அவரது பேச்சை கேட்காமல் பதிவிட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிலால் உலக்கையால் தங்கையின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்து அஜ்மிரா மயக்கமடைந்துள்ளார். படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் வாரங்கலில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த அஜ்மிராவின் தாய், மகன் மீது அளித்த புகாரின் அடிப்படையில், பொலிஸார் ஹரிலாலை கைது செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!