கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பநிலை

விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிக்கு நபர்களை தெரிவு செய்யும் நேர்முக தேர்வின் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவியுள்ளது.

விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிக்கு நபர்களை தெரிவு செய்வதில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலையிடுகின்றார் என நேர்முகத் தேர்விற்கு வந்தவர்கள் குற்றம்சாட்டியதை தொடர்ந்தே இவ்வாறு குழப்பமான சூழ்நிலை நிலவியுள்ளது. இந்த சம்பவம் நேற்று(08.08.2023) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது 25 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உரிய விதத்தில் தெரிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 100 ஆண் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் 50 பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் நியமிப்பதற்காக பல சுற்று நேர்முகத்தேர்வுகள் இடம்பெற்றுள்ளதுடன் அதில் 100 ஆண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை 50 பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் 25 பெண் உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மிகுதி 25 பெண்களுக்கு பதிலாக ஆண்கள் அதாவது 125 ஆண்களும் 25 பெண்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அமைச்சரின் தலையீடே காரணம் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளமையால் நேற்று விமான நிலைய பகுதியில் குழப்பமான நிலை காணப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!