சிவாஜிலிங்கம் கட்சியில் இருந்து நீக்கம் – உறுதிப்படுத்துகிறார் நிசாந்தன்!

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து எம்.கே.சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டது உண்மை என தெரிவித்த தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சு.நிசாந்தன், இதனை கட்சியின் தலைவர் சிறிகாந்தாவும் சிவாஜிலிங்கமும் வெளிப்படையாக உளச்சான்றுடன் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சு.நிசாந்தன் இதனை தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய பயணிப்பதற்கு முன்னதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரி, இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

அந்த சமயத்தில் இந்தியாவில் தங்கியிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், அதற்கு முரணான, முற்றிலும் நேர்மாறான கோரிக்கையை வலியுறுத்தி மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது கடிதத்தில் சர்வஜன வாக்கெடுப்பை கோரியிருந்தார்.

இந்நிலையில் கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கத்தை விலகுமாறு கட்சி தலைமையால் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் எம்.கே.சிவாஜிலிங்கம் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனை ஏனைய தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர் – என்று நிசாந்தன் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!