அமைச்சர் ரோஜாவின் காலில் விழுந்த மூதாட்டிகளால் பரபரப்பு!

ஆந்திர மாநிலத்தின் அமைச்சர் ரோஜாவின் காலில் விழுந்து இரண்டு மூதாட்டிகள் ஆசீர்வாதம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக பூமண கருணாகரன் ரெட்டி பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி, ஒய்எஸ்ஆர் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, தனது குடும்பத்துடன் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ரோஜா சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில், கோவிலில் இருந்து வெளியே வந்த அமைச்சர் ரோஜாவிடம் வயதான பெண்கள் இருவர் பூ, வெற்றிலை பாக்கு, பழங்கள் ஆகியவற்றை கொடுத்தனர்.

பின்னர், திடீரென அமைச்சரின் காலில் விழுந்து, அவரது காலுக்கு மஞ்சள் குங்குமம் தேய்த்து வணங்கினர். இதனை பார்த்த பொதுமக்கள் தங்களது மொபைலில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. வயதில் மூத்த பெண்கள் அமைச்சர் ரோஜாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!