தூங்கிக்கொண்டிருந்த மகனை திடீரென இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற தாய்!

தமிழக மாவட்டம் திருவள்ளூரில் இளைஞர் ஒருவர் பெற்ற தாயினால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயலை அடுத்த புளியம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன் (23). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தந்தை அரி வேலைக்கு சென்ற நிலையில், பூவரசனும் அவரது தாய் செல்வியும் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு மயங்கி கிடந்தனர்.
    
அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தாய் – மகன் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பூவரசனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் தாய் செல்வி சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி அடைந்தனர். பெற்ற மகனை தாயே இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றுள்ளார். பின்னர் தன்னை தானே தாக்கிக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தியபோது, மன அழுத்தம் காரணமாக செல்வி சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதும், கடந்த 10 நாட்களாக தூங்காமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தான் தனக்கு அருகில் தூங்கிக் கொண்டிருந்த பூவரசனை தாக்கியுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார், செல்வி சிகிச்சையில் இருப்பதால் விரைவில் கைது செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!