யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் அம்மையார் தனது பிள்ளைகளுடன் ஆஸ்திரேலிய நாட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் தனது வருமானத்துக்காகவும் ஆரோக்கியமான உணவுக்காகவும், பொழுதுபோக்காகவும் அங்கு கொல்லைப்புறத்தில் கோழி வளர்க்கிறார். அவர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது தனது கோழி வளர்ப்புப் பற்றித் தனது ஊர்ப் பெண்களுக்குக் கூறியிருக்கிறார்.
‘‘அங்கு கோழி வளர்ப்பது மிகவும் சிரமம். சட்ட இறுக்கம் அதிகம். அதிகாலையில் சேவல், கோழி கூவும் சத்தம் கேட்டால் அதற்கு தண்டப்பணம் செலுத்தவேண்டும். அதற்காகச் சேவல், கோழிகள் கூவ ஆரம்பிக்கும் காலத்தில் அதற்கு ஓர் ஊசி ஏற்றி, சேவலை நிரந்தரமாகக் கூவாது தடுக்கின்றனர்’’. சத்தத்தால் ஏற்படுகின்ற சூழல் பாதிப்புக்காகவே இந்தக் கடப்பாடு அங்கு நிலவுகிறது.
ஆனால் இங்கு…?
2.4.2018 அன்று நாயன்மார்கட்டுக் கோவிலொன்றில் அதிக சத்தமாக ஒலிபெருக்கிகள் பாவிக்கப்படுகின்றன என யாழ். மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி மா.இளஞ்செழியன் ‘‘கடவுளுக்கு காது நல்ல கூர்மை. அதனால் சத்தமாக வழிபாடு செய்யவேண்டிய அவசிய மில்லை’’ என்று குறிப்பிட்டு அந்த ஒலிபெருக்கிப் பாவனை களைக் கட்டுப்படுத்தப்படுத்துமாறு குறிப்பிட்டார்.
இந்தத் தீர்ப்பு எல்லாக் கோயில்களுக்கும் பொதுவானது என்று கொள்வோமாக. ஆஸ்திரேலியாவில் ஒலிக்கும் கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், இங்கு நாம் (இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பௌத்தர்கள்) கோயில்களின் எல்லை தாண்டி அளவுக்கு மிஞ்சிய சத்தத்தை ஏற்படுத்தி விடுகிறோம். அதிலும் நாலா புறமும் ஒலிபெருக்கிகளைக் கட்டி நாதஸ்வரம் பக்திப் பாடல், பிராமணர்களின் மந்திரம் என உச்சமான சத்தத்தை எழுப்பி மகிழும் பழக்கம் எமக்கு மாத்திரமே இருக்கிறது.
365 நாள்களில் 10 – 20 நாள்கள் வரையில் திருவிழாவுக்காகக் கோயிலைப் பயன்படுத்துகின்றனர். அதைவிட சூழலை ரணகளமாக்கி வருகின்றனர். கோயில் எல்லையை விட்டு வெளியில் ஒலி பெருக்கியைக் கட்டுவது, சட்டத்துக்குப் புறம்பான வகையில் அதிக டெசிபல் உள்ள ஒலிபெருக்கிகளைக் கட்டி ஒலிக்கவிடுகிறார்கள். ஒரு வகையில் சமூக விரோத செயற்பாடு. ஓர் எல்லைதாண்டிய பயங்கரவாதமும் ஆகும் .
பலர் சூழ்ந்து வாழும் சூழல்
ஒரு மதத்தவரின் ஆலயத்தைச் சுற்றி வாழ்பவர்கள் அந்த மதத்தவர்களாக மாத்திரம் இருப்பதில்லை. இந்தக் கோயில் திருவிழாக்களின் சத்தத்தால் பாதிக்கப்படுவது அனைவரும் தான். ஓர் இனம் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கும்போது எதிரிகளுக்கு அது மிகவும் மகிழ்வைக் கொடுக்கும்.
தமிழர் இனப்பெருக்கம் குறைந்த ஓர் இனமாக இருப்பதால், இருக்கின்ற இளைஞர்களையும் பிள்ளைகளையும் நல்லவர்களாக உருவாக்கி விடுவது அனைவரது கடப்பாடாகும். பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களில் இருக்கும் மதத் துறவிகள் மக்களுக்குப் போதனைகளை நடத்துகின்றனர்.
அவர்களின் சமூக விடயங்கள், பொருளாதாரம், கல்வி, பண்பாடாக வாழ்வது தொடர்பில் போதனைகள் மூலம் வழிப்படுத்துகின்றனர். மக்களும் அவற்றைப் பின்பற்றுகின்றனர். மற்றைய சமயத்தவருடன் ஒப்பிடுகையில் இந்து இளம் சந்ததி ஆலயத்தை நாடுவது குறைவு.
இந்துக்களிடமும், சைவர்களிடமும் துறவிகள் இல்லை. துறவிகளை உருவாக்க எந்த ஏற்பாடும் இல்லை. ஏனைய மதங்களில் தமது குடும்பங்க ளிலிருந்து துறவிகளைத் தத்தமது மதங்களுக்குச் சேவையாற்ற அனுப்பி வைக்கின்றனர். ஒரு கிறிஸ்தவ துறவி குருமடத்தில் பல வருடங்கள் படித்துப் பட்டம் பெறவேண்டும்.
மௌலவிகள் மதரசாக்களில் கற்றுத் தேறுகின்றனர். பௌத்த துறவிகள் பிரிவேனாக்க ளில் கற்கின்றனர். இந்தப்படிப்புப் பின்னணியிலேயே அவர்களின் போதனைகள் நடைபெறுகின்றன. இவ்வாறானதொரு சூழல் இந்துக்களுக்கும், சைவர்களுக்கும் இருப்பதில்லை.
திருவிழாவின் போது நிகழ்த்தப்படும் சொற்பொழிவுகளில் பேசுகின்றவர்கள் சில சமயங்களில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி பற்றியும் பேசுகின்றனர். அதையும் ஒலிபெருக்கி ஊடாகவே பேசுகின்றனர். இவர்கள் படிப்பைப் பற்றி பேசுவதை விடுத்து, ஒலிபெருக்கிகளைக் கோவிலுக்கு வெளியில் யாரும் பாவிக்கக்கூடாது என கோயில் நிர்வாகத்துக்கும் திரு விழாக்காரர்களுக்கும் காதுக்குள் சொன்னால் அந்தச் சூழலில் உள்ள மாணவர்கள் நன்றாகப் படிப்பார்கள். அவர்களின் படிப்புக்கும் கோயில்கள் வேறு வகையில் உதவ முடியும்.
கடவுள்மீது பக்தியுள்ள மக்கள் 24 மணிநேரமும் கோயில்களில் தங்கி, இறைபுகழ் பாடி இன்புற்றிருப்பது தவறல்ல. தாங்கள் விழித்திருக்கிறோம் என்பதற்காக மற்றவர்களும் துன்பப்படவேண்டும் என்று நினைப்பது தான் கடவுளின் பெயரால் செய்யப்படுகின்ற அத்துமீறல் ஆகும்.
ஒலி பரப்புவதில் பெருமை!
இந்துக் கடவுளர்களுக்குக் காது செவிடாக இருக்கவேண்டும் அல்லது இந்த ஒலிபெருக்கிச் சத்தத்துக்கு அவர்கள் எங்கோ ஓடியிருக்கவேண்டும். இந்து மதத்துடன் ஒலிபெருக்கி சேர்ந்து பிறந்த ஒன்றல்ல. இந்துமதம் மிகப் பழையது என்று கூறுவதன் அர்த்தம் இந்த ஒலிபெருக்கிச் சத்தத்தை வைத்துப் பார்க்கும்போது சரியென்றே ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
ஒரு வளர்ச்சியடையாத இனத்துக்குரிய தன்மை ஆஸ்திரேலியாவில் இப்படியிருக்கிறது. வளர்ச்சியடைந்த ஆஸ்ரேலிய சமூகம் சேவல் கூவுவது மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் என அது கூவுவதைக் கட்டுப்படுத்திச் சட்டமாக்கியுள்ளனர். ஆனால், இங்குள்ள கோயில்களின் ஒலிபெருக்கி விடயத்தில் இன்னொருபடி முன்னேற்றம் காணப்படுகிறது. கோயில் திருவிழாக்களின்போது ஒவ்வொரு திருவிழாவுக்கும் ஒவ்வொருவர் பொறுப்பாக இருப்பார்.
அவரே தெப்பை அணிந்து பூசையைச் செய்விப்பார். இவ்வாறான திருவிழாக் காரர்களுக்குத் தெரியாமல் அல்லது அவருக்கு ஆதரவாக வேறு சிலர் வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பி ஒலிபெருக்கிக்காரர்களை ஒலிபெருக்கிகளை ஒலிக்கச் செய்கின்றனர்.
இதன்மூலம் ஒலிபெருக்கி வைத்திருப்பவருக்கு வருமானமும், வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புபவருக்கு பெருமையும் சேர்கிறது.
ஒரு திருவிழா சங்கையாக நடந்தது என்றால் ‘‘எத்தனை கூட்டம் மேளம் அடித்தது? எத்தனை ஒலிபெருக்கிகள் பாடின? எவ்வளவு தூரம் வர்ண பல்ப்புகள் பூட்டினார்கள்? எவ்வளவு வான வெடிகள் போட்டார்கள்?’’ என்றே கேட்கின்றனர். இதுவே தமிழரின் பெருமையாக உள்ளது.
ஒரே இடத்தில் போட்டிக்கு 2 அல்லது 3 ஒலிபெருக்கிகள் கட்டப்படுவதால் அதிக சத்தமும் நாதஸ்வரம் போன்ற இனிய வாத்திய இசைகள் அலறும் சத்தமுமே கேட்கின்றன. இதை இனிமையான இசையாக எப்படி இரசிக்கமுடியும்? பரீட்சைக்குத் தயார்படுத்துகின்ற மாணவர்களுக்கு இது மிகவும் தொல்லையாக இருக்கும். இந்த விடயத்தில் யாரும் கவனிப்பதாக இல்லை. ஒரு சிலரின் பெருமைக்காக ஏழைப்பிள்ளைகள் அழிந்து போகவேண்டி உள்ளது.
‘‘10 நாளும் சகித்துக்கொள்ளுங்கோ என்ன செய்வது? லவுட்ஸ்பீக்கரை கழற்றச் சொன்னால் திருவிழாக்காரர் கோவிப்பினம்’’ என்கிறார்கள்.
இதைவிட ஒலிபெருக்கியைக் கட்டுபவர்கள் அல்லது அதை ஒரு தொழிலாகச் செய்பவர்களுக்கு ஒலி அலைகள் எவ்வாறு பயணிக்கும் என்ற தொழில்நுட்ப அறிவு இருப்பதில்லை. இதனால் சூழல் அதிகம் மாசடைவதுடன், சந்திகளில் ஒலிபெருக்கிகளைக் கட்டுவதால் விபத்துக்களும் ஏற்படுகின்றன.
எல்லா இடங்களிலும் ஒலி பெருக்கி கட்டப்பட்டபின் அவை இயக்கப்படும்போது பேரிரைச்சல் வெளிவருகிறதே தவிர, இரசிக்கக்கூடியதாக எதுவும் இருப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் வாங்கிய காசுக்குக் கூவினால் போதுமென்ற நிலையே காணப்படுகிறது. இவ்வாறான ஒலிபெருக்கிகளுக்கு எதிராக யாராவது கதைத்தால் அது தெய்வ குற்றமாகக் கொள்ளப்படுகிறது.
ஒரு பொலிஸ் அதிகாரியுடன் இது விடயமாகப் பேசியபோது ‘‘இந்த ஒலிபெருக்கியால் எங்களுக்கும் நிம்மதியில்லை. என்ன செய்வது என்று சகித்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் போய் அகற்றினால் அரசியல்வாதிகளும் மதம் சார்ந்தவர்களும் அதனை ஒரு மதத்திற்கு எதிரான அல்லது இனத்துக்கு எதிரான நடவடிக்கையாக எடுத்துவிடுவார்கள். பொதுமக்கள் அதுபற்றிய முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்தால் நாங்கள் நிச்சயம் அதற்கு நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.
முதலமைச்சரின் அணுகுமுறை!
அண்மையில் முதலமைச்சர் சி.வி.கே.விக்னேஸ்வரன் பொலிஸ் அதிகாரிகளை யாழ்ப்பாணத்தில் சந்தித்து ‘‘குற்றச் செயல்கள் குறைந்துள்ளன’’ என்று பொலிஸாரைப் பாராட்டியிருந்தார். ஒலிபெருக்கி விடயத்தில் மதில்மேல் பூனை என்ற அணுகு முறையையே கடைப்பிடித்தார்.
அதாவது, கோயில் திருவிழாக்காரரையும் பகைத்துவிடக்கூடாது. அதேவேளை, ஒலிபெருக்கியால் அசௌகரியப்படுபவர்களின் மனம் குளிரும் வகையிலும் அறிக்கை விட்டிருந்தார். ஆனால் பொலிஸ் அதிகாரிகளிடம் ‘ஒரு கோயிலின் எல்லை என்பதை வரையறுத்து அயலிலுள்ள மக்களுக்கு இடை யூறாக பொருத்தப்படுகின்ற அனைத்து ஒலிபெருக்கிகளையும் பறிமுதல் செய்யுங்கள்’ என்ற அறிக்கை விட்டிருந்தால் மறுநாளே இந்த விடயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கும்.
வடமாகாண சபை உறுப்பினர்களால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட ஒலிபெருக்கிகள் ஒரு சமூகவிரோதச் செயற்பாட்டுக்குப் பயன்படுகிறது என்பது பற்றி அவர் வாய் திறக்கவில்லை. 119 அமர்வுகளை வடமாகாண சபை கடந்துவிட்டது. ஓர் அமர்வை வடமாகாண சபை இந்த ஒலிபெருக்கி விடயத்துக்காகக் கூட்டினால் (வடமாகாண சபைக்குள் இருக்கும் ஒலிவாங்கிகள் பிடுங்கப்படாமல் பாதுகாக்கப்படல் வேண்டும்) ஆக்கபூர்வமான ஒரு விடயத்தையாவது வடமாகாண சபை செய்ததாக இருக்கும்.
நல்லூர்க் கோயில், நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில், மட்டக்களப்பு மயிலம்பாவெளி அம்மன் கோயில் போன்ற கோயில்களில் மிகச் சிறிய சத்தம் குறைந்த ஒலிபெருக்கிகளையே பாவிக்கின்றனர். இதைமீறும் கோயில் தலைவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் ஆகியோருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கினால் மிக இலகுவாக இந்தத் தொல்லையிலிருந்து இந்துக்களும், சைவர்களும் விடுபட முடியும்.
இது விடயத்தில் இந்து கலாசார அமைச்சு, சுற்றுச்சூழல் அமைச்சு, மாகாண சபைகள், பிரதேச செயலகங்கள், பிரதேச அமைப்புக்கள், மனித உரிமைகள் அமைப்புகள், பாடசாலை அதிகாரிகள் சிவசேனா போன்ற சமய அமைப்புக்கள் இதில் தலையிடுவது அவசியமாகும்.
ஒரு பண்பாடடைந்த சமூகம் தனது பேச்சிலும், மற்றவர்களுடன் பழகுவதிலும், நடை, உடை பாவனை போன்றவற்றிலும், மெல்லிய சத்தத்துடனான இசை மற்றும் பாடல்களை இரசிப்பதிலும், வாசிப்புப் போன்றவற்றால் மனதை ஒரு நிலையில் வைத்திருப்பது என எல்லா விதத்திலும் மேன்மையானவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஏனையவர்களின் நிம்மதிக்குப் பாதகமாக எதையும் செய்யப்போவதில்லை.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!