வீதியோரத்தை வீடாக்கி சொல்ல முடியாத துயரங்களுடன் எமது பூர்வீக வாழ்விடங்ளை விடுவிக்கக் கோரிய எமது நியாயப் போராட்டத்துக்கு முடிவு என்ன? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ள கேப்பாபிலவு மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குத் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை நேற்றுக் கையளித்தனர்.
இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் ஓராண்டைத் தாண்டிய நிலையில் 414 ஆவது நாளாக நேற்றும் இராணுவ முகாமுக்கு முன்னால் தொடர்ந்தது. 104 குடும்பங்களுக்குச் சொந்தமான 181 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்து கேப்பாபிலவு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் அரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, ஆகியோருக்கான மனுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசாவிடம் கையளித்ததோடு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மனுக்களும் அனுப்பி வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோருக்கான மனுக்களை மாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரனிடம் ஒப்படைத்தனர்.
மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்ட மனுவில், கேப்பாபிலவு பூர்விக வாழ்விட வழித்தோன்றல் மக்களாகிய நாம் எமது வாழ்விடம் கோரி நீதி நியாயமான உரிமையான கோரிக்கைகளை முன்வைத்து தொடர் கவனவீர்ப்புப் போராட்டத்தில் கால்பதித்த போது தாங்களும் இயன்றளவு முயற்சிகள் எடுத்து ஒரு தொகுதி வாழ்விடம் கிடைக்கப் பங்கு கொண்டமைக்காக நாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது கோரிக்கைக்கு அரசினால் இதுவரை சாதகமான முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை வீதியோரத்தை வீடாக்கி சொல்ல முடியாத துன்ப துயரங்களைச் சுமந்து எமது பூர்விக வாழ்விடம் எமக்கு வேண்டும் என்ற தளராத மன உறுதியுடன் 414 நாள்களாக தொடர் கவனவீர்ப்புப் போராட்டத்தில் கால் பதித்து நிற்கும் எமக்கு முடிவு என்ன?. மக்கள் பிரதிநிதிகளான நீங்கள் என்ன முடிவு சொல்கிறீர்கள் – என்றுள்ளது.
மனுக்களைப் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா கருத்துத் தெரிவிக்கும் போது, மக்களது கோரிக்கை நியாயமானது. போர் முடிவுக்கு வரும் வரை அவர்கள் இந்தக் காணிகளில் பூர்வீகமாக வாழ்ந்தவர்கள்.
அந்தக் காணியை விடுவித்து தங்களுக்கு ஒரு இயல்பான வாழ்க்கை ஏற்படுத்தித் தருமாறுதான் அந்த மக்கள் கோருகின்றனர். இதற்காகவே தெருவை வீடாக்கி வாழ்ந்து வருகிறார்கள். நிச்சயமாக இந்த அரசு அவர்களுடைய கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது காணிகள் விடுவிக்கப்படவேண்டும் – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!