முன்னாள் போராளிகளுக்கு பட்டதாரி நியமனம் வழங்கப்பட்டமை சமாதானத்திற்கான அறிகுறி – வடக்கு ஆளுநர்

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 30 பேருக்கு பட்டதாரி நியமனம் வழங்கப்பட்டமை சமாதானத்திற்கு ஒரு முன்னேற்றகரமான சம்பவமாக அமைக்கின்றது என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

புலிகள் அமைப்பிலிருந்து இறுதிக் யுத்தத்தில் சரணடைந்த போராளிகள் புனர்வாழ்வின் பின்னர் தமது உறவினர்களுடன் இணைந்துகொண்டனர். அவர்களில் பட்டதாரிகளாகக் காணப்பட்ட பலர் கடந்த 2017 ஆரம்பத்தில் சுண்டுக்குளியில் அமைந்துள்ள எனது அலுவலகத்தில் என்னை சந்தித்து ஒரு கோரிக்கையினை முன்வைத்திருந்தனர். அதாவது பட்டதாரிகளுக்கான அரச பணிநியமனங்களில் தமது பெயர்களும்உள்வாங்கப்படவேண்டும் என்பதாகும்.

அதற்கு அமைய கடந்த 2017.07.26 அன்று அமைச்சர் சுவாமிநாதனுக்கு நான் எழுத்து மூலம் முன்வைத்த ஆலோசனையினை ஏற்றுகௌரவ அமைச்சர் அமைச்சரவைபத்திரத்தினை முன்வைத்து நிறைவேற்றி இப்போராளிகளுக்கும் நேற்று அரச பணி நியமனத்தினை வழங்கியிருக்கின்றார். அவருக்கும் எனதுமனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஏற்கனவே கடந்த வருடம் 35 புனர்வாழ்வு பெற்ற போராளிகள் பட்டதாரிகள் நியமனத்தில் உள்வாங்கப்பட்டு அரசபணிக்கு அமர்த்தப்பட்டார்கள். மேலும் இரண்டாம் கட்டமாக நேற்றைய தினம் 30 புனர்வாழ்வு பெற்ற போராளிகள் அரசபணிக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள்.

சமாதானத்திற்கு இது ஒருமுன்னேற்றகரமான சம்பவமாக அமைக்கின்றது. இதுபோன்று மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசசேவைகள் கிடைக்க எனது முழு ஒத்துழைப்பினையும் வழங்கவுள்ளதாகதெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கான அரச நியமனங்கள் அலரிமாளிகையில் நேற்று (20) பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!