மாற்றுத் தலைமை தொடர்பாக அவ்வப்போது சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு சிலர் கூறுவதைக் கேட்கின்றோம். இவர்கள் யாரை மனதில் வைத்துக்கொண்டு கூறுகிறார்கள் என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும். ஓர் இனத்தின் தலைமையை சிலர் ஒன்று சேர்ந்து ஒரே இரவில் உருவாக்கிவிட முடியாது. அவ்வாறு உருவாக்கப்படுவது உண்மையான தலைமையும் அல்லை. அவரிடத்தில் சிறந்த தலைமைத்துவமும் இருக்கப் போவதில்லை.
அந்நியரின் ஆட்சியிலேயே
தனிநாடு கேட்டிருக்கலாம்
அந்நியரின் ஆட்சியின் போது அவர்களுக்கு விசுவாசமாக இருந்தவர்கள் தலைவர்கள் ஆக்கப்பட்டனர். இத்தகையவர்கள் தாம் சார்ந்த இனத்தின் நன்மைகளைவிட தமது நலன்கள் பற்றியே அதிகமாகச் சிந்தித்தனர். அதற்கு ஏற்ற வகையில் செயற்படவும் செய்தனர். எமது அன்றைய தலைவர்கள் தீர்க்க தரிசனத்துடன் செயற்பட்டிருந்தால் இன்றைய இக்கட்டான நிலை தமிழர்களுக்குக் கிடைத்திருக்க மாட்டாது.
இந்த நாட்டில் இருந்து இறுதியாக வெளியேறிய ஆங்கிலேயேரிடம் தமிழர்களுக்குத் தனியானதொரு நாட்டைப் பிரித்து வழங்கமாறு கேட்டிருந்தால் அவர்கள் அதை நிச்சயமாகச் செய்திருப்பார்கள். வெளியேறுவதற்குத் தயாராக இருந்த ஆள்களுக்கு இதுவொரு பெரிய காரியமாக இருந்திருக்க மாட்டாது. ஆனால் எமது தலைவர்கள் பெரும் பான்மையினரை விட்டுப் பிரிந்து செல்வதற்குத் தயாராக இருக்கவில்லை. அதுமட்டுமல்லாது. தலைநகர் கொழும்பில் வசிப்பதையே விரும்பி நின்றனர். அவர்களின் சுய நலமும், தீர்க்க தரிசனமற்ற செயற்பாடுகளும் தமிழர்களின் வாழ்வையே சிதைத்து விட்டன.
தமிழ்த் தலைமைகளுக்கு
நெருக்கடி நிலை இன்று
தந்தை செல்வா, பிரபாகரன் போன்றவர்கள் தாம் சார்ந்த இனத்துக்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். அவர்கள் கொண்டிருந்த இலட்சியம் நிறைவேறாது போனாலும் மக்களால் இன்றளவும் போற்றிப் புகழப்படுகின்றனர். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்கள் நிர்க்கதியான தொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கொடுத்ததை வாங்கிக்கொண்டு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டியவர்களென்ற நிர்ப்பந்தமொன்று இவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைவர்களாக இருப்பவர்களின் பணிகள் கடினமாக மாறியுள்ளன. பெரும் பான்மையினத்தவர்கள் இவர்களுக்குரிய அங்கீகாரத்தை வழங்குவதற்குத் தயங்குவதோடு உரிய மதிப்பைக் கொடுப்பதற்கும் தவறிவிடுகின்றனர். தமிழ்த் தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆட்சியாளர்களிடம் எடுத்துக் கூறும்போது அவை தட்டிக்கழிக்கபபடுவதையே காண முடிகின்றது.
உசுப்பேற்றல்கள் வேண்டாம்
தமிழ் அரசியல்வாதிகள் சிலர் சில ஊடகங்களின் துணையுடன் தமது அரசியல் பிழைப்பை நடத்தி வருகின்றனர். ஊடக தர்மத்தை மதிக்காத சில தமிழ் ஊடகங்கள் தமது விருப்பத்துக்கு ஏற்றவகையில் எழுந்தமானமாகச் செய்திகளை வெளியிட்டு மக்களைக் குழப்புவதையே தொழிலாகக் கொண்டுள்ளன. ஒரு பிரிவு மக்கள் இதை நம்பத்தான் செய்கின்றனர்.
மகிந்த ராஜபக்ச தென் பகுதி அரசியலைக் குழப்பி வருவது போன்று சி.வி.விக்னேஸ் வரன் வடபகுதியில் குழப்பி வருகின்றார். உணர்ச்சிகரமான வசனங்களைப் பேசுவதிலும், மறைமுகமான இனவாதக் கருத்துக்களை உதிர்ப்பதிலும் வல்லவரான இவர், இவற்றைக் கொண்டே தமது அரசியல் பயணத்தைத் தொடர முடியுமென நம்புகின்றார். மாகாண சபையில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அவருக்கு ஆதரவாகத் திரண்டவர் களை விட தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராகத் திரண்டவர்களே அதிக மெனக்கூற முடியும். இதைக் கூட விக்னேஸ்வரனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இதனால்தான் மக்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக அவர் நம்புகின்றார். அடுத்த மாகாணசபைத் தேர்தலில் தனிக்கட்சி அமைத்தோ அல்லது வேறு தரப்பினருடன் இணைந்தோ முதலமைச்சர் வேட்பாளராகத் தாம் போட்டியிடப் போவதாகத் தெரிவிக்கிறார். முன்பு மாகாணசபையில் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மாணம் கொண்டுவரப்பட்ட போதும் மாற்றுத் தலைமை தொடர்பாகச் சிலர் கருத்து வெளியிட்டனர். தற்போது மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் அவர் நிறுத்தப்பட மாட்டாரென அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் திரும்பவும் அது எழுப்பப்பட்டுள்ளது.
சம்பந்தனைப் பிரதியிட
இன்று எவரும் இல்லை
தற்போதைய நிலையில் சம்பந்தனுக்கு இணையான தலைவர்களை எங்கும் காண முடிய வில்லை. விக்னேஸ்வரனுக்குக் கூட இந்தத் தகுதி இல்லையென்றுதான் கூற வேண்டும். அந்தத் தகுதி அவரிடம் இருந்திருந்தால் கடந்த தடவை நேரடியாகவே அவர் களத்தில் இறங்கியிருக்க முடியும் சம்பந்தனின் தயவில் களமிறங்கியிருக்கத் தேவையில்லை.
கூட்டமைப்பின் ஆதரவில் பதவியில் அமர்ந்து, அதன் சுகத்தையும் அனுபவித்துவிட்டுத் தற்போது வீறாப்பாகப் பேசுவது ஏற்கத் தக்கதல்ல. கூட்ட மைப்புக்கு எதிரான சதிகள் ஒன்று சேர்ந்து தமக்குள் ஒரு தலைமைத்துவத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதற்கான உரிமை அவர்களுக்குப் பூரணமாக உண்டு. மக்கள் விரும்பி னால் இதையே தமது தலைமையாக ஏற்றுக் கொள்ளவும் அவர்களால் முடியும்.
இதை விடுத்து தற்போதைய தலைமைத்துவத்தை அகற்றுவதற்கு முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு சரியான தலைமைத்தவத்தை அமைக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் மாற்றுத் தலைமை தொடர்பாகப் பேசுவதில் அர்த்தமேயில்லை. இது தாமும் குழம்பிக்கொண்டு மக்களையும் குழப்பி விடுகின்றதொரு செயலாகவே கருதப்படும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!