தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சி அமைத்தபோது வெட்கம் கெட்ட கூட்டமைப்பு என்று விமர்சித்த, சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது கட்சியினர் ஈ.பி.டி.பியுடன் இணைந்து வவுனியாவில் ஆட்சி அமைத்துள்ளமைக்கு என்ன கூறப் போகின்றார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் அரசியல் அவதானிகள்.
உள்ளூராட்சித் தேர்தலில் தொங்கு நிலை ஏற்பட்ட சபைகளின் தவிசாளர் தெரிவுகள் யாழ்ப்பாணத்தில் கடந்த மாத இறுதியில் ஆரம்பமாகின. ஈ.பி.டி.பியின் ஆதரவுடன், கூட்டமைப்பு பெரும்பாலான சபைகளைக் கைப்பற்றியது.
அது தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
“தங்களை முன்னர் பெரிய கொள்கைப் பிடிப்பாளர்களாகக் காட்டிக் கொண்டவர்கள் – தங்களது கொள்கைக்கும் ஈ.பி.டி.பிக்கும் ஒத்துவராது என்று சொன்னவர்கள் – ஈ.பி.டி.பி. மீது காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தவர்கள் இன்று அரச தரப்புடன் இணைந்துதான் சபைகளை தற்போது உருவாக்கின்றார்கள் என்பது வெட்கக் கேடான விடயம்”-என்று சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பின்னணியில் வவுனியா நகர சபையின் தவிசாளர் தெரிவு நேற்றுக் காலை இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்து தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டிருந்தது. கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினருக்கு, ஈ.பி.டி.பி., மகிந்தவின் சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
கூட்டமைப்பை விமர்சித்த சுரேஷ் பிரேமசந்திரன் தனது கட்சி உறுப்பினர்கள் செய்ததை என்னவென்று சொல்லப் போகின்றார் என்று அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!