தமிழர் விடுதலைக் கூட்டணி நடுநிலமை வகித்து, நகர சபையின் தவிசாளர் பதவி வேறு யாருக்கும் செல்லக் கூடாது என்பதால் அங்கு போட்டியிட்டோம் என்று கூறினார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்.
வவுனியா நகர சபையில் நேற்று தமிழர் விடுதலைக் கூட்டணியினர் திடீரெனத் தவிசாளர் பதவிப் போட்டியில் களமிறங்கினர். ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றனர். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் செயலருமான சிவசக்தி ஆனந்தன் கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் கூறியதாவது,-
தவிசாளர் தொடர்பாக நாங்கள் நடுநிலமை வகிப்போம் என்று எமது கட்சி ஆரம்பத்தில் முடிவெடுத்திருந்தது. ஆனால் இங்கு கட்சிகள் பெற்ற உறுப்பினர்களை கணக்கிட்டுப் பார்த்தபோது நாங்கள் நடுநிலமை வகித்தால் தவிசாளர் பதவி வேறு யாருக்கும் செல்லும் நிலமை இருந்தது.
நாம் நடுநிலமை வகித்ததால் தான் பதவி வேறு யாருக்கும் சென்றது என்ற குற்றச்சாட்டுக்கு எமது கட்சி ஆளாகாமல் இருப்பதற்காகவே மிகவும் அவதானமாக பல தரப்பட்டவர்களுடன் கலந்துரையாடியே இந்த முடிவை எடுத்தோம் – என்றார்.
இதேவேளை, வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபையில் தமிழர் விடுதலைக் கூட்டணி நடுநிலமை வகித்திருந்தது. அந்தச் சபையை சிறிலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியிருந்தது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!