பெண்கள் அழகாக இருப்பதால் கற்பழிப்பு சம்பவம் நடக்கிறது- பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு

பெண்கள் அழகாக இருப்பதால் தான் கற்பழிப்பு சம்பவம் அதிகமாக நடக்கிறது என பிலிப்பைன்ஸ் அதிபரான ரோட்ரிகோ டியூட்ரெட் பேச்சு சர்ச்சையானது.

பிலிப்பைன்ஸ் அதிபராக ரோட்ரிகோ டியூட்ரெட் பதவி வகிக்கிறார். போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொண்டார். அதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் சுட்டு கொல்லப்பட்டனர்.

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி இவர் பொது மேடைகளில் பேசும் பேச்சுகளும் பிரச்சினைக்குரியதாக மாறிவிடுகிறது. கடந்த ஆண்டு சிறுமிகள் கற்பழிப்பு குறித்து பேச்சு சர்ச்சைக்குரியதானது.

அதுபோன்று தற்போதும் இதுபோன்ற சிக்கலில் அவர் மாட்டிக்கொண்டார். இவர் தனது சொந்த ஊரான தவாயோவில் நடந்த விழாவுக்கு சென்று இருந்தார். இதற்கு முன்பு இங்கு இவர் மேயராக பதவி வகித்தார்.

அந்த விழாவில் பேசும் போது, ‘‘போலீஸ் அறிக்கையின்படி தவாயோ நகரில் பல கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு பல அழகிய பெண்கள் உள்ளனர். அதனால் தான் இங்கு அதிக அளவில் கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. முதலில் பெண்கள் சம்மதிக்க மாட்டார்கள். வேண்டாம் என்பார்கள், மறுப்பு தெரிவிப்பார்கள். அதனால் தான் கற்பழிப்பு சம்பவம் நடக்கிறது என்று பலமாக சிரித்தபடி ‘ஜோக்’ அடித்தார்.

இது விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. அதிபர் டியூட்ரெட்டின் இப்பேச்சுக்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

செய்தி தொடர்பாளர் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர். அதிபர் அடித்த இந்த ‘ஜோக்’ கை இவ்வளவு பெரிதுபடுத்துவது ஏன் என்று தெரியவில்லை. இதன்மூலம் கற்பழிப்பு குறித்த ஜோக்குகளை பெண்கள் விரும்பவில்லை என தெரிகிறது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!