2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வடக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக எவரை நிறுத்துவது ? இந்தக் கேள்வி பல மட்டங்களிலும் தலைதூக்கியிருந்தது. தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டக் கிளை அவசர அவசரமாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசாவை முதலமைச் சர் வேட்பாளராக அறிவித்தது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனோ, மாவையை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவில்லை என்று கூறினார். மறுபுறம், அப்போது மேடைப்பேச்சாளராக இருந்த ஓய்வு பெற்ற நீதியரசர் விக்னேஸ்வ ரனை நிறுத்துவதே தனது திட்டம் என்பதைப் பகிரங்கப்படுத்தியிருந்தார்.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியினருக்கும் விக்னேஸ்வரனில் விருப்பம் இல்லை. மாவையே வேண்டும் என்று மல்லுக் கட்டி நின்றார்கள். ‘பபுள்கம்’ போன்று இந்த விடயம் ஈய்ந்து – இழுபட்டுச் சென்றது. சம்பந்தன், சுமந்திரன் (பின்னாளில் சுமந்திரன் தானும் விக்கியை முழு மனதோடு ஆதரிக்கவில்லை என்று சொன்னார்) அணி தவிர்ந்த ஏனையோர், விக்கியை எதிர்த்து நின்றனர். ஆனால், இறுதிக் கட்டத்தில் மாவை, தான் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடவில்லை என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்தார்.
விக்னேஸ்வரனுக்கு வழி திறந்தது. சம்பந்தன் நினைத்தது நிறைவேறியது. கதாப்பிரசங்கம் செய்து கொண்டிருந்தவரை, வலிந்து அரசியலுக்கு இழுத்து வந்து விட்டனர்.
அதே ஆரம்பப் புள்ளி
இப்போதும், பிரச்சினை அதே ஆரம்பப் புள்ளியில், வடக்கு மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக எவரை நிறுத்து வது என்ற கேள்வியுடன் வந்து நிற்கின்றது. மீண்டும், மாவை., விக்கி போட்டியே. ஆனால் கடந்த தடவை, மாவையை ஆதரித்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், இந்தத் தடவை அவரை ஆதரிக்கத் தயாரில்லை. சுமந்திரனோ, இப்போது விக்கியை விரட்டி அடிப்பதே தனது குறிக்கோள் என்ற நிலையில் இருக்கின்றார்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனோ அமைதியாக இருக்கின்றார். 2013ஆம் ஆண்டுத் தேர்தலின்போதும், மாவையா ? விக்கியா ? என்ற கேள்வி எழுந்து மக்களைக் குழப்பிக் கொண்டிருந்த சமயத்திலும், அவர் அமைதியாகவே இருந்தார். இப்போதும் அவர் அமைதியாகவே இருக்கின்றார். தான் எடுத்த முடிவை, நினைத்ததை நோக்கி ஏனையோரை நகர்த்துவதில் சம்பந்தன் வலு கில்லாடி. அதற்கு அவரது அமைதிகாப்பு பாணி நன்றாகவே கைகொடுக்கும்.
ஆனால், இப்போது சம்பந்தனால் அவ்வாறு செய்ய முடியுமா என்பது மிகப் பெரிய கேள்வியே. கட்சியின் கட்டுப்பாடு சம்பந்தனை விட்டுக் கைமீறிவிட்டது. சம்பந்தன் சொல்வதைச் செய்யும் அளவுக்கு கட்சி இல்லை. ஏன் சுமந்திரனே இல்லை. இப்போதைய சூழலில் சம்பந்தன் தனிமரமாகவே நிற்கின்றார். இதற்கு ஆகப் பிந்திய உதாரணம், கூட்டமைப்பின் ஈ.பி.டி.பியுடனான நெருக்கம்.
சம்பந்தனை மீறிய முடிவு
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் காரணமாக சபைகளில் தொங்கு நிலமையே ஏற்பட்டிருந்தது. ஆட்சி அமைப்பது தொடர்பில் கூட்டமைப்பின் கூட்டம் கொழும்பில் பெப்ரவரி மாதம் மூன்றாம் வாரத்தில் நடந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து ஆட்சி அமைப்பது பற்றிப் பேசப்பட்டது. உடனே சுமந்தி ரன், அவர்கள் அயோக்கியர்கள் என்று சாரப்பட பதிலளித்திருக்கின்றார்.
அதற்கு சம்பந்தனோ, ஈ.பி.டி.பியினர் அதைவிட அயோக்கியர்கள் என்று சொல்லியிருக்கின்றார். ஈ.பி.டி.பியுடனோ, பிள்ளையானின் கட்சியுடனோ, கூட்டமைப்பு கூட்டு வைப்பதை சம்பந்தன் விரும்பவில்லை. ஆனால் நடந்தது என்ன ? சம்பந்தனின் முடிவை எதிர்த்து, ஈ.பி.டி.பியுடன் பேச்சு நடத்தினார்கள் மாவை.சேனாதிராசாவும், சுமந்திரனும்.
சம்பந்தனின் நிலமை இதுதான். இதை சுமந்திரன், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவரிடமும் பகிர்ந்திருக்கின்றார்.
‘‘ஐயா (சம்பந்தன்) திரும்பவும் விக்னேஸ்வரனை நிறுத்தவே எண்ணுகின்றார்போல் இருக்கின்றது’’ என்று பங்காளிக் கட்சித் தலைவர் சுமந்திரனிடம் கூற, ‘‘இல்லை அப்படியிருக்காது. விக்னேஸ்வரனை நிறுத்தினால் தமிழ் அரசுக் கட்சி அதனை எதிர்க்கும்’’ என்று சுமந்திரன் பதிலளித்திருக்கின்றார். ‘‘சம்பந்தன் தமிழ் அரசுக் கட்சி இல்லையா’’ என்று பங்காளிக் கட்சித் தலைவர் கேள்வி எழுப்ப, ‘‘அவரைத் தவிர கட்சியி லுள்ள மற்ற எல்லோரும் அதனை எதிர்ப்போ’’ என்று கூறியிருக்கின்றார்.
தமிழ் அரசுக் கட்சி முன்வைத் துள்ள மாவையின் தெரிவை சம்பந்தன் ஏற்றுக் கொள்வாரா என்பது மறுபுறம் எழும் கேள்வி. 2013ஆம் ஆண்டே மாவையை, சம்பந்தன் நிராகரித்திருந்தார். வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை. தகுதியானவர் இல்லை என்று அவர் பகிரங்கமாகவே கட்சிக் கூட்டத்தில் கூறியிருந்தார். 2013ஆம் ஆண்டு சுமந்திரன் அவரது தெரிவாக இருந்தாலும், அப்போது அவரை நிறுத்துவதை சம்பந்தன் அவ்வளவாக விரும்பியிருக்கவில்லை.
விக்கியின் பயணம்
இப்படியானதொரு இக்கட்டு நிலையில், கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் தமிழ் அரசுக் கட்சி பிளவுண்டு போகப் போவது என்பது நிச்சயம்.
‘‘கூட்டமைப்பே இல்லை. பின்னர் அங்கிருந்து எனக்கு போட்டியிட எப்படி எனக்கு அழைப்புவரும்’’ என்ற விக்னேஸ்வ ரனின் ஊடக அறிக்கைக் கேள்வி, அவர் கூட்டமைப்பில் போட்டியிடப் போவதில்லை என்பதை எடுத்தியம்பியுள்ளது. ஆனால், மீண்டும் முதலமைச்சராவதற்கு விக்னேஸ்வரன் விரும்பு கின்றார். மக்களதும், கடவுளினதும் பெயராலும் அதைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
முதலமைச்சர் கூட்டமைப்பில் போட்டியிடாவிட்டால், எந்த அணியில் இறங்குவார். அவரைப் பொறுத்தவரையில், தமிழ் அரசுக் கட்சியை கழற்றிவிட்டு, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், கூட்டணி, காங்கிரஸ் என்று புதிய கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கே விரும்புகின் றார்.
முதலமைச்சர் வேட்பாளராக வடக்கில் போட்டியிடுவதற்கு இந்தியாவின் ஆசிர்வாதமும், அனுசரணையும் தேவை என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதற்கான காய் நகர்த்தலுக்காகவே இப்போது இந்தியாவுக்கும் சென்றிருக்கின்றார்.
முதலமைச்சரின் குரு, பிரேமானந்த சுவாமிகள். விராலி மடத்திலுள்ள அவரது ஆச்சிரமத்துக்கு அவ்வப்போது சென்று வருபவர் விக்னேஸ்வரன். இம்முறை ஆன்மிகப் பயணம் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு இந்தியாவுக்குச் செல்கின்றார் என்றால், நிச்சயம் அவரது பயணம் ஆன்மிகத்துக்கானது அல்ல. அரசியலுக்கானது. முதலமைச்சராக மீண்டும் தான் வருவதை உறுதிப்படுத்துவதற்காகவே அவர் இந்தியாவுக்குச் சென்றிருக்கின்றார்.
காங்கிரஸ் கொள்கை தவறுமா ?
இந்தியாவின் எடுபிடியாக விக்னேஸ்வ ரன் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கினால், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அவரை ஏற்றுக் கொள்ளுமா? இதற்கு இல்லை என்றே பதில் கூறலாம். ஒருவேளை, மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடமாட்டோம் என்ற கொள்கையில் நின்றிருந்த காங்கிரஸ், கொள்கை தவறி, – வழுவி, மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்த தைப் போன்று, இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து தன்னை மாற்றிக் கொண்டால், விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.
2013ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலின்போது விக்னேஸ்வரன் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து சொச்ச வாக்குகளைப் பெற்றவர். இப்போது அவர் மீண்டும் போட்டியிட்டால், அந்த வாக்கு எண்ணிக்கையைத் தாண்ட வேண்டிய நிர்பந்தம் இருக்கின்றது. மக்கள் செல்வாக்கானது, தனக்கு அபரிமிதமாக அதிகரித்திருக்கின்றது என்று விக்னேஸ்வரன் நம்புகின்றார். அவர் நம்ப வைக்கப்படுகின்றார். அதை ஏற்றுக் கொண்டு அறிக்கையும் விடுகின்றார்.
தனது வாக்குவங்கியில் சரிவு ஏற்படாது என்று உறுதியாக விக்னேஸ்வரன் நம்பினால்தான், அடுத்த தேர்தல் களத்தைச் சந்திப்பார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடக்கும் வரையில், விக்னேஸ்வரன் வடக்கில் தாக்குப் பிடிப்பாரா என்ற மில்லியன் ரூபா பெறுமதியான கேள்வி முக்கியமா னது. வடக்கு மாகாணசபை எதிர்வரும் ஒக்ரோபர் 25ஆம் திகதியுடன் செயலிழந்து விடும்.
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல், பெரும்பாலும் அடுத்த ஆண்டின் நடுப் பகுதியில் அல்லது மார்ச் மாத இறுதிப் பகுதியில் நடப்பதற்கான வாய்ப்புக்களே அதிகமுண்டு. மாகாண சபைகள் திருத்தச் சட்டம் நாடாளுமன்றுக்கு கொண்டு வரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டு, ஒன்பது மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில், விகிதாசார முறையில் தேர்தல் நடத்தப்படும்.
தாக்குப் பிடிப்பாரா விக்கி ?
முதலமைச்சர் பதவி இல்லாமல், வடக்கு மாகாணத்தில் விக்னேஸ்வரன் தாக்குப் பிடித்து நிற்பாரா ? விக்னேஸ்வரன் பிறப்பிலிருந்து அரசியல்வாதி அல்லர். அவர் அரசியல் வெற்றிக்காக அதிகம் உழைப்பவரும் அல்லர். விக்னேஸ்வரன் என்ற விம்பத்தை வைத்து ஏனையோர் உழைத்துக் கொடுக்க, அந்த வெற்றியை மட்டுமே ருசிப்பவர் அவர். பதவி இழந்த பின்னர் ஏனைய அரசியல்வாதிகள் போன்று விக்னேஸ்வரன் இருப்பாரா? இல்லை, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் என்ற பதவியை வைத்துக் கொண்டு, அடுத்த மாகாணசபைத் தேர்தல் நடக்கும்வரை இழுத்துப்பிடிப்பாரா ? இந்தக் கேள்விக்கு காலம்தான் விடை சொல்லும்.
விக்கி சாதித்தது என்ன ?
விக்னேஸ்வரன் வடக்கின் முதலமைச்சராக மீண்டும் ஏன் தெரிவு செய்யப்பட வேண்டும் ? முதலாவது பதவிக் காலத்தில் வடக்கு மாகாணசபையின் ஊடாக அவர் செய்தது என்ன ? இந்தக் கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டும். வெறுமனே, விக்னேஸ்வ ரன் என்ற விம்பத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதால் பயன் எதுவும் கிடைக்கப் போவதில்லை.
வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பில் வடக்கு மக்கள் திருப்தியடைந்திருக் கின்றார்களா? இந்தக் கேள்விக்கான பதில், விக்னேஸ்வரனை மீண்டும் முதல்வராக்க வேண்டுமா இல்லையா? என்ற கேள்விக்கான விடையாக அமையும்.
மகிந்த ஆட்சியின் கீழ், இராணுவ அதிகாரியை ஆளுநராகக் கொண்டே வடக்கு அரசு இயங்க ஆரம்பித்தது. பெரும் அடக்கு முறைக்கு மத்தியிலும், எரிமலையாக வெடித்த மக்கள், விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டமைப்பு அணிக்கு வெற்றியை அள்ளிக் கொடுத்தனர்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால், வடக்கு ஆளுநரை மாற்றுவோம், இராணுவத்தை வெளியேற்றுவோம் என்று அந்த வேளையில் வாய்கூசாமல் வாக்குறுதி வழங்கினர். ஆட்சிக் காலம் முடிகின்ற இந்தத் தறுவாயிலும், வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்று விக்னேஸ்வரன் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார்.
வடக்கு மாகாண சபை அமைக்கப்படும்போது தமிழ் மக்களுக்கு இரண்டு கனவுகள் இருந்தன. நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாங்கள் கொடிகட்டிப் பறக்கவேண்டும். இங்கே அரசியல் ரீதியாக விக்னேஸ்வரன் சாதித்திருக்கின்றார். இனப்படுகொலைத் தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அரசியல் ரீதியாக விக்னேஸ்வரனும் சரி, வடக்கு மாகாணசபையினரும் சரி சாதித்திருக்கின்றார்கள்.
இங்கே சாதித்திருக்கின்றார்கள் என்று விளிப்பதன்மூலம் அதில் அவர்கள் வெற்றியடைந்தார்கள் என்பது பொருளலல்ல. தமிழ் மக்களின் வேணவாக்களை உரிய வகையில் எடுத்தியம்பியிருக்கின்றார்கள். அந்த வேணவாக்களை திரும்பத் திரும்ப அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்திருக்கின்றார்கள். அந்த வேணவாக்களிலிருந்து தாம் ஒருபோதும் தளம்பவில்லை என்பதை உணர்த்தியிருக்கின்றார்கள்.
நிர்வாகத் தோல்வி
மறுபுறம், நிர்வாக ரீதியாக அவர்கள் எதையும் செய்யவில்லை. நிர்வாக ரீதியான செயற்பாட்டுத் தோல்விக்கு அரசியல் மீது பழிபோட்டு விட்டுத் தப்பிக்கும் உத்தியையே, வடக்கு அரசு கையாண்டிருக்கின்றது. நிர்வாகத் தோல்விக்கு பொறுப்புக் கூறுவதற்கு, வடக்கு முதல்வரோ, அவர் தலைமையிலான அரசோ தயாரில்லை.
வடக்கு ஆளுநர் ஒத்துழைக்கவில்லை, வடக்கு தலைமைச் செயலர் ஒத்துழைக்கவில்லை, வடக்கு அமைச்சின் செயலர்கள் ஒத்துழைக்கவில்லை என்று குரல் எழுப்பினார்கள். ஆட்சி மாற்றத்துடன், வடக்கு அரசுடன் ஒத்தோடக் கூடியவர்கள் மேற்படி பதவிகளுக்கு நிய மிக்கப்ப ட்டார்கள். அதன் பின்னராவது வடக்கு அரசின் நிர்வாகம் திறம்பட இயங்கியதா ? எதையாவது குறைசொல்லிக் கொண்டிருக்கின்றார்களே தவிர, எதையும் செய்யவில்லை.
இதற்குமேலாக, தொழில் வாய்ப்புக்களை உருவாக்கக் கூடிய முதலீட்டுத் திட்டங்களைப் புறம்தள்ளி விட்டதுதான், நிர்வாக ரீதியாக வடக்கு அரசு சாதித்த விடயம்.
எவரிடம் ஒப்படைக்கப்போகின்றோம்?
வடக்கு மாகாண அரசு இல்லாமல், ஆளுநர் நிர்வாகத்தின் கீழ் இருந்திருந்தால், என்னவெல்லாம் நடக்குமோ, அதுவேதான் வடக்கு மாகாண அரசு இருந்தபோதும் நடந்தது. வடக்குமாகாண அரசு என்ற ஒன்று, தனது புத்தாக்க திட்டங்கள் எதனையும் செயலுருப்படுத்தவில்லை.
அவர்கள் செயலுருப்படுத்தவில்லை என்பதைவிட புத்தாக்க, திட்டங்கள் எதுவுமின்றி, இயங்குகின்ற அரச இயந்திரந்துடன் சேர்ந்து இயங்கினார்களே தவிர, ஓர் அரசாக கொள்கை ரீதியாக எதையும் செயற்படுத்தவில்லை. விதிவிலக்காக, முன்னாள் போராளிகளுக்கான உதவிகளை மாத்திரம் குறிப்பிட முடியும்.
இந்தச் சீத்துவக்கேட்டில், வடக்கு அரசின் சுக்கானைப் பிடித்திருந்த விக்னேஸ்வர னிடம் மீண்டும் அதனை ஒப்படைப்பது பொருத்தமா? இங்கே விக்னேஸ்வரன் சரிவரச் செயற்படவில்லை என்பது ஒருபுறம். அவருக்கு வடக்கு அரசின் உறுப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை என்பது மறுபுறம். ஆனால், வடக்கின் அரசின் உறுப்பினர்கள் ஒத்துழைத்த காலத்திலும் அவர் எதனையும் செய்திருக்கவில்லை.
நிர்வாக ரீதியிலும், அரசியல் ரீதியிலும் ஆளுமையான ஒருவரிடமே வடக்கு அரசின் சுக்கானை ஒப்படைப்பது பொருத்தமாக இருக்கும். இல்லாவிடின், வடக்கு அரசின் மீதான மக்களின் வெறுப்பு, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!