ஏழு பேரின் விடுதலைக்கு தமிழ்நாடு அமைச்சரவை மீண்டும் ஆளுனருக்குப் பரிந்துரை

ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், ஏழு பேரையையும் விடுதலை செய்வதற்கு மாநில ஆளுனருக்கு, தமிழ்நாடு அமைச்சரவை நேற்று பரிந்துரை செய்துள்ளது.

27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி அகிய 7 பேரையும், விடுதலை செய்வதற்கு தமிழக அரசு ஏற்கனவே முடிவு செய்திருந்தது.

இவர்களின் விடுதலைக்கு இந்திய மத்திய அரசு தடை ஏற்படுத்தி வந்ததுடன், உச்சநீதிமன்றத்தில் மனுக்களையும் தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த இந்திய உச்ச நீதிமன்றம், ஏழு பேரினது விடுதலை குறித்து தமிழ்நாடு ஆளுனர் முடிவெடுக்கலாம் என்று கூறியிருந்தது.

இதனடிப்படையில், நேற்று மாலை கூடிய தமிழ்நாடு அமைச்சரவை ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு, மாநில ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரையின் மீது ஆளுனரே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!