காணாமல் போனவர்களில் பலர் தடுப்பு முகாம்களில் சுயந।ினைவில்லாத நிலையில் காணப்பட்டனர் என்று பூசா தடுப்பு முகாமிலிருந்து அண்மையில் விடுதலையான முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் விவகாரம் தமிழர்கள் மத்தியில் பூதாகாரம் எடுத்துக் காணப்படுகின்றது. அவர்களின் உறவுகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக இவர்கள் காணப்படுகின்றமை தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தி வருகின்றது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் படையினரால் கைது செய்யப்பட்டோரே காணாமல்போயினர்
வீடுகளில் வைத்துக் கைது செய்யப்பட்டவர்களும், போர் முனையில் வைத்துக் கைது செய்யப்பட்டவர்களும், படையினரிடம் சரணடைவதற்காகச் சென்றவர்களும், போர் இடம் பெற்றுக் கொண்டிருக்கும்போது அச்சம் காரணமாகப் படையினரின் பிரதேசத்தினுள் உள்நுழைந்தவர்களுமெனப் பலர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களின் உறவுகள் இவர்களை எங்கு தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் உறவினர்கள் இன்னமும் நம்பிக்கையை இழந்துவிடவில்லை.
அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அரச தலைவர், ‘‘எங்கு தேடியும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர்களின் உறவுகளுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாக அரசு சிந்தித்து வருகின்றது’’ எனத் தெரிவித்தமை காணாமல் போனவர்களது உறவுகளுக்கு மிகக் கடுமையான வேதனையை ஏற்படுத்திவிட்டது. ஆனாலும் அதன் பின்னரும் அவர்கள் நம்பிக்கையை இழந்துவிடவில்லை.
காணாமல் போனோரில் பலர் உயிருடன் உள்ளதான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தற்போது காணாமல் போனவர்களில் பலர் உயிருடன் இருப்பதாக வௌிவந்த செய்தி, அந்த உறவினர்கள் மத்தியில் ஒரு புறத்தில் மகிழ்ச்சியையும் மறுபுறத்தில் வேதனை கலந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்்தியுள்ளது.
அரசு இந்த விடயத்தில் இனியும் மெத்தனமாக இருக்க முடியாது. காணாமல் போனவர்கள் தமிழர்கள்தானேயென்ற அலட்சிய மனோபவம் அரசிடம் இனியும் இருக்குமேயானால், அதன் எதிர் விளைவுகள் மோசமானதாக அமைந்துவிடும்.
அண்மையில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட வௌிநாட்டுப் பிரதிநிதிகளிடம் காணாமல் போனவர்கள் கண்டிபிடிக்கப்படுவதன் அவசியத்தை எதிர்கட்சித் தலைவரான சம்பந்தன் வலியுறுத்திக் கூறியுள்ளார். ஐ.நாவும் இந்த விடயத்தில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றது. இதனால் அரசு இனியும் மெத்தனமாக இருந்துவிட முடியாது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் எவ்வித விசாரணைகளு மின்றிப் பல ஆண்டுகளாகச் சிறைகளில் வாடி வருகின்றனர். பலர் பத்து ஆண்டுகளுக்கு மேலாகக்கூட இவ்வாறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தொடர் பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் குற்றவாளிகளென நிரூபிக்கப்பட்டால், தண் டனை வழங்கப்பட வேண்டும், நிரபராதிகள் எனக் காணப்பட்டால் விடுதலை செய்யப்படல் வேண்டும். இதில் ஒன்றையும் செய்யாது அரசு காலம் கடத்துவதை இனியும் அனுமதிக்க முடியாது.
பெரும்பான்மை இனத்தவரால் கிள்ளுக் கீரையாகக் கருதப்படும்சிறுபான்மை இனத்தவர்கள்
இந்த நாட்டைப் பொறுத்தவரையில், சிறுபான்மையின மக்கள் கிள்ளுக் கீரையாகவே கருதப்படுகின்றார்கள். அவர்களை மனிதர்களாக மதிக்கின்ற மனோபாவத்தை இங்கு காணமுடியவில்லை. பௌத்த மதத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக் கொள்பவர்கள், அதன் வழி நில்லாது அதர்மத்தைக் கையில் எடுத்துக்கொள்வது நல்லதல்ல.
சிறுபான்மையினத் தலைவரான சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து அகற்ற வேண்டுமென ஒரு பகுதியினர் இனவாதக் கூச்சல் போடுகின்றனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு கூட்டமைப்பு ஏதாவது நிபந்தனைகளை விதித்திருந்தால் அவை ஏற்றக்கொள்ளப்படக் கூடாதென ஒரு சாரார் கூறி வருகின்றனர். ஆனால் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக இவர்கள் சிறிதுகூட அக்கறை காட்டுவதில்லை.
மாறாகத் தமிழர்கள் படுகின்ற வேதனையில் இன்பம் காணத் துடிக்கின்றனர். இது எந்த வகையில் நியாயமெனத் தெரியவில்லை.
காணாமல் போனவர்களில் பலர் சுயநினைவின்றி தடுப்புக் காவலில் உள்ளதாக முன்னாள் போராளியொருவர் கூறியிருப்பது சாதாரணமானதொரு விடயமல்ல. இந்த விடயத்தில் அதிக கரிசனை காட்டப்படல் வேண்டும். ஆராய்ந்து பார்த்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அரச தலைவரும், தலைமை அமைச்சரும், தாம் இந்த நாட்டின் தலைவர்கள் என்ற ரீதியில் உடனடியாகச் செயற்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும். காணாமல் போனவர்களும், அவர்களது உறவுகளும் விடுகின்ற கண்ணீரைச் சாதாரணமாகக் கருதிவிடக்கூடாது.
அவர்களது கண்ணீருக்கு அதிக வலுவுள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது. இந்த விடயத்தில் எடுக்கப்படுகின்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இந்த நாட்டின் மீதான தவறான அவப்பெயரைத் துடைத்தெறியும். உரியவர்கள் இதை உணர்ந்தால் அதுவே போதுமானது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!