பாஜக எம்பியின் கால்களைக் கழுவி அந்த நீரைக் குடித்த தொண்டர்- ஜார்க்கண்ட் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக எம்பியின் காலை தொண்டர் ஒருவர் கழுவி அந்த நீரைக் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கோடா தொகுதியின் பாஜக எம்.பி. நிசிகாந்த் துபே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிசிகாந்த் துபே தனது உரையை முடித்து மேடையில் அமர்ந்தபோது, பாஜக தொண்டர் ஒருவர், அவரது கால்களை தண்ணீரால் கழுவி, அந்த நீரையே குடித்தது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதனைப் பார்த்த பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். தொண்டரை தன் கால்களை கழுவ அனுமதித்தது சரியல்ல என்றும் பலர் கூறினர். பாஜக தலைவர்களின் ஆணவம் உச்சத்தை எட்டியிருப்பதாக காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால் நடந்த சம்பவத்திற்கு நியாயம் கற்பித்துள்ளார் நிசிகாந்த் துபே. தனது ஆதரவாளர்கள் தன் மீது வைத்துள்ள அன்பை எதிர்ப்பாளர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார். ஒருநாள் அந்த தொண்டரின் பாதங்களை கழுவும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!