மைத்திரி, கோத்தா படுகொலைச் சதி தொடர்பாக நாமலிடம் இரவிரவாக 7 மணிநேரம் விசாரணை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ ஆகிய இருவரையும் படுகொலை செய்வதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்த, ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுப் படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவிடம், 7 மணி நேரம் விசாரணைகளை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்து கொள்ளப்பட்டுள்ளது.

“ஜனாதிபதியையும் கோத்தாபயவையும், மாகந்துரே மதுஷ் என்பவரைக் கொண்டு, படுகொலை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது” என, நாமல் குமார, கண்டியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்திருந்தார். பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த, பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வாவே, மேற்கண்டவாறு தெரிவித்திருந்தாரென, அந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, நாமல் குமார தெரிவித்திருந்தார்.

மேற்படி கூற்றுத்தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு, வறக்காபொலவிலுள்ள நாமல் குமாரவின் வீட்டுக்குச் சென்று, விசாரணைகளை நடத்தி, வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி சென்ற அந்தக் குழு, அன்றிரவு 11 மணி முதல், மறுநாள் காலை 6:15 மணி வரையிலும் விசாரணைகளை நடத்தி வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதென, பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் விசாரணைப் பிரிவின் பொலிஸ் குழுவொன்று, நாமல் குமாரவின் வீட்டுக்கு முதல்முதலில் சென்று, மேற்படி விவகாரம் தொடர்பில் வாக்குமூலத்தைப் பதிவு செய்துகொண்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!