அரசுடன் பேச்சுக்களுக்கு செல்வது தொடர்பில் சம்பந்தனோ விக்னேஸ்வரனோ தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
வவுனியா கலாசார மண்டபத்தில் நேற்று (24) இடம்பெற்ற தமிழ் தேசயிக் கூட்டமைப்பின் விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் நீங்கள் நிபந்தனையுடன் ஜனாதிபதியின் சந்திப்புக்கு செல்லமுடியும் என தெரிவித்திருந்தீகளே இன்று மாறுபட்பட கருத்தை தெரிவிக்கின்றீர்கள் என கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
சம்பந்தனோ. விக்னேஸ்வரனோ இவ் விடயம் சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. எனவே கட்சி கூடி இன்று பாராளுமன்ற குழுவில் பங்கேற்றபதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. கட்சியினுடைய முடிவே எங்களுடைய முடிவு.
ஆனந்தசங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இல்லை என ஊகங்களும் செய்திகளும் வந்துகொண்டிருக்கின்றதே உங்கள் கருத்து என்ன என ஊடகவியலாளர் கேட்டபோது ஊகங்களுக்கு பதிலளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இரணைமடு நீர்த்திட்டம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் கேட்டபோது, இவ்விடயம் தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சில முயற்சிகளை மேற்கொள்கின்றார்.
ஒரு நிபுணர் குழுவை நியமித்து அதனூடாக ஒரு அறிகையை பெறவுள்ளார். அவ் அறிக்கை வந்தபின்னர் மேலதிகமாக பேச்சுக்கள் இடம்பெற்று முடிவெடுக்கப்படும் எனவும் சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.
















