ஆந்திராவை சேர்ந்த முன்னணி தெலுங்கு நடிகரான உதய் கிரண் தனது வீட்டில் நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புஞ்சகட்டாவின் ஸ்ரீ நகர் காலனியில் உள்ள தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிபோட்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவரது அறையில் தூக்கில் தொங்கியதை பார்த்த அவரது மனைவி விஷிதா மற்றும் அருகிலுள்ள வீட்டினர் அவரை மீட்டு ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் கொண்டுபோய் சேர்த்தனர். ஆனால் அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
1980 ஆம் வருடம் ஜனவரி 26ந் திகதி பிறந்த கிரண் அவரது நீண்ட நாள் நண்பரான விஷிதாவை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை தனியாக இருந்த உதய் எதற்காக தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தார் என இதுவரை தெரியவில்லை. தனிப்பட்ட பயணமாக மணிகொண்டா நகருக்கு சென்ற விஷிதா நேற்றிரவு பலமுறை உதய்யின் தொலைபேசிப்பு தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்காததால் சந்தேகமடைந்து அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்து பார்ததபோது அவர் தூக்கு போட்டுக்கொண்டது தெரியவந்தது.
அவர் தெலுங்கில் சித்திரம், நுவ்வு நீனு, மனசந்தா நுவ்வெ மற்றும் ஸ்ரீராம் ஆகிய வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
திரையுலகத்தை சேர்ந்த பல்வேறு நபர்கள் வைத்தியசாலைக்கு உடனடியாக விரைந்து சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
















