ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் முன்வைக்கப்பட்டவுள்ள தீர்மானத்தின் இரண்டாவது வரைவு நாளை மறுதினம் சனிக்கிழமை முன்வைக்கப்படவுள்ளது.
அன்றைய தினமே அது சபையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் பார்வைக்கு வழங்கப்படவுள்ளது.
அமெரிக்கா முன்வைத்த முதலாவது வரைவு தொடர்பில் தமிழர் தரப்பிலிருந்தும் காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. போர்க் குற்ற விசாரணை ஒன்றை இந்த வரைவு வலியுறுத்தவில்லை என்று தமிழர்கள் சுட்டிக்காட்டினர். அமெரிக்கா ஏமாற்றிவிட்டது என்று தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் சிலரும் மாணவர்களும் கொந்தளித்துக் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பில் நிதானமாகக் கருத்துக்களை வெளியிட்டாலும், போர்க் குற்ற விசாரணை தொடர்பில் அழுத்தமான வாசகங்கள் அடங்கிய தீர்மானம் ஒன்றே நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தமது எதிர்பார்பை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளிடம் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது.
அதே சமயத்தில் முதலாவது தீர்மான வரைபு தொடர்பில் இதுவரையில், மனித உரிமைகள் சபை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியல் இரண்டு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. அவற்றில் மேற்குலக நாடுகள், தீர்மானம் இன்னும் காத்திரமானதாக வரையப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன.
இலங்கைக்கு ஆதரவான நாடுகள் தீர்மானத்தின் வாசகங்கள் இன்னும் மென்மைப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன. பொறுப்புக் கூறுவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவை கோரிக்கை விடுத்திருந்தன.
ஆனால் தீர்மான வரைபுக்கு ஆதரவான நாடுகள் சர்வதேச விசாரணை உள்ளடக்க வேண்டும் என்று கோரியிருந்தன. குறிப்பாக அமெரிக்க தீர்மான வரைபில் உள்ள 8 ஆவது பரிந்துரையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் கண்காணிப்பு மற்றும் விசாரணை என்ற விடயத்தில் சொல் மயக்கம் காணப்படுகின்றமையை சுட்டிக்காட்டிய நாடுகள், தெளிவான வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன.
சகல தரப்புகளது கருத்துக்களையும் உள்வாங்கிய அமெரிக்க இராஜதந்திரிகள் தீர்மான வரைபில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளினால், ஜெனீவாவிலுள்ள அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரண்டாவது வரைபு எதிர்வரும் சனிக்கிழமை ஐ.நா மனித உரிமைகளின் உறுப்பு நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் என்று அறிய முடிகின்றது. இந்தத் தீர்மான வரைபு நிச்சயம் முதலாவது வரைவிலும் பார்க்க வலிமைப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து தீர்மானத்தின் இறுதி வரைவைத் தயாரிப்பதற்கு முன்பாக எதிர்வரும் 18ஆம் திகதி ஜெனிவாவில் இணை மாநாடு ஒன்றை நடத்துவதற்கும் அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதில் வெள்ளை மாளிகையின் உயர் மட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு தீர்மானத்தின் அவசியம் பற்றி உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விளக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















