ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கையின் உள்ளக செயற்பாடுகளில் தலையீடு செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. அது மாத்திரமின்றி அவரால் நியமிக்கப்டும் விசாரணைக்குழுவை மட்டுமல்ல அவரது நாயைக்கூட எமது நாட்டில் விசாரணை மேற்கொள்ள அனுமதிக்கப்போவதில்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அங்கு தொடர்ந்தும் கூறுகையில்
இலங்கை தொடர்பில் ஐக்கியநாடுகளின் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட குறித்த பிரேரணையை நாம் ஏற்கனவே நிராகரித்து விட்டோம். இந்த சந்தர்ப்பத்திலும் கூட நாம் எதிர்க்கின்றோம். ஏனெனில் எமது உள்நாட்டு விவாகாரங்களில் அந்நிய சக்திகள் தலையீடு செய்வதை நாம் விரும்பவில்லை.
இலங்கை என்பது இறைமையுள்ள நாடாகும். ஜனநாயக ரீதியில் தெரிந்தெடுக்கப்பட்ட அரசாங்கமொன்றும் உள்ளது. எனவே எமது விவகாரங்களில் தலையிட முடியாது.
எமது வீட்டில் பிரச்சினை இருந்தால் நாமே அதற்கு தீர்வு காண வேண்டும். அதேபோன்று எமது நாட்டில் பிரச்சினை காணப்பட்டால் அதற்கும் நாமே தீர்வினை காண வேண்டும். இதன் காரணமாகவே எமது அரசாங்கம் சர்வதேச சதிகளுக்கு எதிராகவும் அமெரிக்கப் பிரேரணைக்கு எதிராகவும் ஜெனிவாவில் போராடியது.
ஆகவே இலங்கை தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்கு நவநீதம் பிள்ளையினால் குழவிற்கோ அல்லது அவரது வீட்டின் நாய் கூடவோ இலங்கைக்கு வந்து விசாரணை நடத்துவதற்கு இடமனிக்க மாட்டோம். இதில் நாம்; மிகத் தெளிவாக இருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
















