நெடியவன் குழுவின் இரண்டாம் நிலைத் தலைவர் இலங்கையில் கைது என்கிறது கொழும்பு ஊடகங்கள்

arrest

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நெடியவன் குழுவின் இரண்டாம் நிலைத் தலைவர் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கபிலன் எனப்படும் நந்தகோபன் என்ற நெடியவன் குழுவின் இரண்டாம் நிலைத் தலைவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈரான் மற்றும் மலேசிய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கபிலனைக் கைது செய்துள்ளனர்.

மார்ச் மாதம் 6ம் திகதி கபிலனை இலங்கை அதிகாரிகள் நாட்டுக்கு அழைத்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நெடியவன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரிவின் இரண்டு பிரதித் தலைவர்களில் ஒருவராக கபிலன் கடமையாற்றி வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. நெடியவன் குழுவின் ஒரு பிரதித் தலைவரான அரவிந்தன் ஐரோப்பாவை மையாகக் கொண்டு இயங்கி வருவதாகவும், கபிலன் தென் கிழக்கு ஆசியாவை மையமாகக் கொண்டு இயங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கபிலன் மலேசியாவிலிருந்து தெஹ்ரான் வழியாக லண்டனுக்கு போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் போது தெஹ்ரான் அதிகாரிகள் கபிலனை கைது செய்துள்ளனர்.

போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி லண்டனுக்கான பயணத்தை தொடர முடியாது என தெஹ்ரான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கபிலன் மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மலேசிய அதிகாரிகள் கபிலனைக் கைது செய்து, இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: , , ,

Leave a Reply