இலங்கை ஐ.நா விசாரணைகளுக்கு ஒத்துழைக்கத் தவறினால், ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதிக்குமா என்பது குறித்து தற்போது தாம் கலந்துரையாட விரும்பவில்லை என்று சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிடப் பிரதிநிதி டேவிட் டலி தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில், இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம், என்ன நினைக்கிறது என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர்,
“ ஐ.நா தீர்மானத்துடன் பலமாக இணங்கிச் செயற்படுவதற்கு இலங்கை அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலுவாக ஊக்குவிக்கிறது.
தீர்மானத்தின் இரண்டாவது பந்தியில் கூறப்பட்டுள்ளதற்கமைய, தற்போது ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைத்தும், உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்ளவும், இலங்கை இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை நாம் கேட்டுக் கொள்கிறோம். இது மிகவும் முக்கியமான சூழ்நிலை.
விசாரணைக்கு ஒத்துழைக்கத் தவறினால், என்ன நடக்கும் என்று இப்போதே கூற முடியாது.
இது ஆரம்பக்கட்டம். தடைகள் குறித்து கலந்துரையாட நான் விரும்பவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
















