யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படும் நிலையில் இறுதிப்போரின் போது உயிரிழந்த இராணுவத்தினரை நினைவு கூர்ந்தும் இராணுவத்தினரைக் கௌரவித்தும் தமிழ் மக்களை மேலும் மேலும் சினமூட்டும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. அதன்ஒரு அங்கமாகவே வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் முல்லைத்தீவு இராணுவ தலைமையம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் மாகாண போர் வீரர் தினம் நேற்று புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு அருகில் இடம்பெற்றது.
அதன்படி புதுக்குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் யுத்தத்தில் பங்கெடுத்த இராணுவத்தினருக்கும் கௌரவிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வடக்கு ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலக்சுமி ரமேஷ், யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு அரச அதிபர்கள் , முல்லைத்தீவு கட்டளைத்தளபதி ஜெகத் டயஸ் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உறவுகளை இழந்தவர்களுக்கு சுதந்திரமாக அஞ்சலி செலுத்தக் கூட முடியாத துர்ப்பாக்கியவாதிகளாக தமிழ் மக்கள் இருக்கும் போது பெரும்பான்மையினர் யுத்தத்தில் இறந்த இராணுவத்திற்கு பகிரங்கமாக கொளரவம் வழங்கி வெற்றிக் கொண்டாட்டங்களையும் நடாத்தி வருகின்றது. அதன்படி 5ஆண்டு யுத்த வெற்றிக் கொண்டாட்டம் ஆனது இம்முறை மாத்தறையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே இவ்வாறான செயற்பாட்டிளால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் நசுக்கப்படுகின்றனர் என்பதே உண்மையாகும்.
















