காங்கேசன்துறை வீதி – கொக்குவில், பூநாறி மரத்தடியில் இன்று செவ்வாய் இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். இவர்களின் ஒருவரின் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகத் தெரியவருகிறது.
6 மோட்டர் சைக்கிள்களில் வந்த இளைஞர் குழுவினர், வீதியில் முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்தவர்களை இழுத்து விழுத்தி தாறுமாறாக வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். கொக்குவில் – பெற்பதி வீதியைச் சேர்ந்த செந்தீசன் (வயது 24), பூநாறிமரத்தடியைச்; சேர்ந்த திலீப் ஆகியோரே வாள்வெட்டில் காயமடைந்தவர்களாவர்.
முச்சக்கரவண்டி செலுத்தி வந்த இளைஞர் வெட்டுக் காயத்துடன் தப்பியோடிய நிலையில் முச்சக்கரவண்டிக்குள் இருந்த இளைஞரை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் குழுவினர் சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளனர்.
பின்னர் அவர்கள் தப்பியோடிவிட்டனர். மயங்கிய நிலையில் இருந்த இளைஞரை மீட்ட பிரதேச மக்கள் அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
















