யாழ். அச்சுவேலி, வளலாய் மேற்கு இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள தமது குடியிருப்புக் காணிகள் மற்றும் பயிர்ச்செய்கை நிலங்களை 23 வருடங்களின் பின்னர் பார்வையிடுவதற்காக நேற்றுக்காலை ஆர்வத்தோடு சென்ற மக்களை, இராணுவத்தினர் காணிக ளைப் பார்ப்பதற்கு அனுமதிக்காது திருப்பியனுப்பினர்.
இதனால் அம் மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
வளலாய் மேற்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்கள் காணிகளை பார்வையிடுவதற்கு நேற்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் எதிர்வரும் 24ம் திகதி வரை அனுமதிக்கப்பட்டுள்ளதாக மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய நேற்று வளலாய் கடற்கரை, காங்கேசன்துறை வீதி இருமருங்கும் நீர் வாவிக்கேணி உட்பட பலாலி கிழக்கு எல்லை வரையுள்ள காணிகளின் உரிமையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் இருந்து வளலாய் கிராம அலுவலர் மூலம் வளலாய் மேற்கு மீள்குடியேற்ற செயற்குழுவுக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து செயற்குழுவினர் காணிகளைப் பார்வையிடுவது தொடர்பான அறிவித்தல்களை பொது இடங்களில் ஒட்டியதோடு மேற்படி பகுதியை சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து வாழும் பகுதிகளிலும் அறிவித்தல்களை விடுத்திருந்தனர்.
கடந்த 1990ஆம் ஆண்டில் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து பல்வேறு நெருக்கடிகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் வாழும் மக்கள் 23 வருடங்களின் பின்னர் நேற்று தமது வாழ்விடங்களையும் பயிர்ச்செய்கை நிலங்களையும் பார்வையிடும் ஆர்வத்தோடு வாடகைக்கு வாகனங்களை ஏற்பாடு செய்து வளலாய் நோக்கிச் சென்றனர்.
அவர்கள் வளலாய் பகுதியை அண்மித்து தமது காணிகளைப் பார்வையிடச் செல்லும் போது, இராணுவக்கட்டுப் பாட்டுப் பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது எனக்கூறி அவர்களை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.
உங்களை உட்செல்ல அனுமதிக்குமாறு தமக்கு எந்த கட்டளைகளும் வரவில்லை எனக்கூறி அவர்களைத் திருப்பி அனுப்பினர். நீண்டநேரமாக அவ்விடத்தில் காத்துநின்ற மக்கள் பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
வளலாய் மேற்கு இராணுவக்கட்டுப்பாட்டு பகுதி காணிகளில் தங்களை குடியேற அனுமதிக்க வேண்டும். தங்களது சொந்த நிலங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இங்கிருந்து இடம்பெயர்ந்துள்ள 224 குடும்பத்தினர் முறையீடு செய்து பதிவு செய்திருந்தனர்.
அவர்கள் தற்பொழுது வடமராட்சி, வடமராட்சி கிழக்கு உட்பட குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெயர்ந்த நிலையில் வசித்து வருகின்றனர்.
இது தொடர்பாக வளலாய் மீள்குடியேற்ற செயற்குழு நிர்வாகிகள் கருத்துத் தெரிவிக்கையில், வளலாயில் மேற்கு மீள்குடியேற்றத்தில் பல தடவைகள் ஏமாற்றப்பட்டு விட்டோம். அதில் நேற்று நடைபெற்றது பெரிய ஏமாற்றம்.
மக்கள் தமது இருப்பிடங்களையும் பயிர்ச்செய்கை நிலங்களையும் ஒரு தடவையேனும் நேரில் பார்வையிட இந்த முறை சந்தர்ப்பம் கிடைக்கும் என நம்பி வந்தனர்.
ஆனால் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடனும் கவலையுடனும் திரும்பிச் சென்றனர்.
எமக்கு காணிகளைப் பார்க்கலாம் என அறிவித்தவர்கள், தற்போது இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை என்ற அறிவித்தலை தெரிவிக்கவில்லை. இதனால் தான் நாங்கள் நம்பிக்கையுடன் வந்தோம் என்றனர்.
















