வடமாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு இந்தமுறை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிடக் கூடுமெனத் தெரியவருகின்றது. மேலும் கடந்த தேர்தலைப்போலன்றி இம்முறை கடுமையான போட்டி நிலவுமெனவும் எதிர்வு கூறப்படுகிறது. கூட்டமைப்பின் சார்பில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராசா முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவது அநேகமாக உறுதியாகிவிட்டது. கடந்த முறையும் இவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் கடைசி நேரத்தில் விக்னேஸ்வ ரன் நுழைக்கப்பட்டதால் போட்டியிலிருந்து பின்வாங்க நேரிட்டது.
இதேவேளை விக்னேஸ்வரன் தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர் தனிக்கட்சியொன்றை ஆரம்பித்து மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவாரென ஒரு தகவல் தெரிவிக்கின்றது. வேறு கட்சிகளின் ஆதரவுடன் அவர் போட்டியிடுவதற்கான சாத்தியம் தொடர்பாகவும் பேசப்படுகின்றது.
இதேவேளை மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்த பின்னர் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலமாக அவர் நாடாளுமன்றம் செல்வாரென இன்னொரு தகவல் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக அவரிடமே கேட்டால் தருணம் வரும்போது பதில் கூறுவேன் எனப் பதிலளிக்கின்றார். அவர் மதில்மேல் பூனையாக இருப்பது தெளிவாகத் தெரிகின்றது. ஈபிடிபியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவும் முதலமைச்சர் பதவியில் கண்வைத்துள்ளமை தெரியவருகின்றது. அவர் இது தொடர்பாக வெளிப்படையாகவே தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இவர்களைவிட வேறு சிலரும் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் உள்ளதென்பதை மறுத்துவிட முடியாது.
மாகாணசபை நிர்வாகம் என்பது
இலங்கைக்குத் தேவையற்றதே
இலங்கையைப் போன்றதொரு சிறிய நாட்டில் மாகாண சபை நிர்வாகம் அவசியமற்றதொன்றாகும். இந்தியா போன்ற பெரிய நாடுகளில் அமைந்துள்ள மாநிலங்கள் இலங்கையைவிடப் பெரியன. எமக்கு அண்மையில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநிலம் இவற்றைவிடவும் மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்டது.
சுமார் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு வசிக்கின்றனர். அங்கு ஒரு மாநில நிர்வாகம் உள்ளது. முதலமைச்சர் ஒருவரும் உள்ளார். அங்கு மாநிலங்களுக்கு காணி, பொலிஸ் உட்பட முக்கிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதால் சீரான நிர்வாகம் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் இங்கு அந்த நிலை காணப்படவில்லை.
வடக்கில் அடாவடிக்குழுக்களின் அட்டகாசம் தலைதூக்கியுள்ள போதிலும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு மாகாணசபையினால் முடியவில்லை. தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளில் சிங்களக் குடியேற்றங்கள் அரசின் ஆதரவுடன் தாராளமாகவே இடம்பெற்று வருகின்றன. காணி அதிகாரங்கள் வழங்கப்படாததால் இதையும் வேடிக்கை பார்க்வே மாகாண சபையினால் முடிகின்றது. இதைப்போன்று பல விடயங்களைக் குறிப்பிட முடியும்.
வடமாகாண சபை
சாதித்தது என்ன?
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் 2013ஆம் ஆண்டு இடம்பெற்றது. இந்த ஐந்து வருட காலத்தில் அதனால் சாதிக்க முடிந்தவற்றைப் பட்டியிட்டால் எதுவுமே கண்களுக்குத் தெரியாது. ஆனால் மாகாண சபைக்கான செலவினங்கள் வானை எட்டி நிற்கின்றன. நாட்டு மக்களின் வரிப்பணம் வீணாகச் செலவழிக்கப்படுவதற்கு வடமாகாண சபையை உதாரணமாகக் குறிப்பிடமுடியும். வடக்கு–கிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்குச் சொந்தமான நிலங்கள் அடாத்தாக அபகரிக்கப்படுகின்றன.
அந்நியர்களின் குடியேற்றங்க ளால் அவர்களின் இனப் பரம்பல் வீழ்ச்சியைக் கண்டு வருகின்றது. இதனால் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் பெரும் பாதிப்பு ஏற்படப் போகின்றது. இவற்றையெல்லாம் தமிழ் அரசியல்வாதிகள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. இனிமேல் மாகாணசபைத் தேர்தல் இடம்பெறும்போது எமது அரசியல்வாதிகள் பதவிகளைப் பிடிப்பதற்காக ஒருவரையொருவர் தரக் குறைவாக விமர்சிப்பதிலேயே தமது காலத்தைக் கடத்தப் போகின்றனர்.
அப்போது மக்களை அவர்கள் மறந்துவிடுவார்கள். பதவி ஒன்றே அவர்களது இலட்சியமாக இருக்கும். பதவியில் அமர்ந்துவிட்டாலும் மக்களின் நினைவு இவர்களுக்கு வரப்போவதில்லை. முதலமைச்சராக வருவதற்குப் போட்டியிடுபவர்கள் மாகாணசபைக்குரிய அதிகாரங்களையும் ஒருகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தாம் பதவி வகிப்பதால் எதையாவது சாதிக்க முடியுமா? என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும். அதிகாரமில்லாத பதவிக்குப் போட்டி தேவையா?
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!