தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரிவினை நோக்கங்களைக்கொண்டு செயற்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
ஆறு வேறுபட்ட மனுக்களுக்குப்பதிலளித்த மாவை.சேனாதிராசா தமிழ் தேசியக்கூட்டமைப்போ, தமிழர்களோ தனி நாடு அமைப்பதற்கான நோக்கங்களைக் கொண்டிருக்கவில்லை என்றார். தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா, 23.09.2014 அன்று உயர்நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசியின் மூலம் இந்த உறுதியுரையை வழங்கினார்.
தமிழ்ப்பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் என்பது வெறித்தனமான குறுகிய தேசியவாத எல்லைக்குள் முன்னெடுக்கப்படுவதற்கு தமிழரசுக்கட்சியும் அதன் புதிய ஒட்டப்பட்ட வடிவமான தமிழ் தேசியக்கூட்டமைப்புமே பிரதான காரணிகள்.
தேசிய விடுதலை என்பது பிரிவினைக்கானதல்ல. பிரிந்து செல்வதற்கான உரிமைக்கானது! – இதைக்கூட புரிந்துகொள்ள முடியாத மாவை.
தமிழ்ப்பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தை வெறிகொண்ட பிரிவினைக்கான போராட்டமாக மாற்றி ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளும் என்ற கோசத்துடன் தேர்தலில் வாக்குப்பொறுக்கியவர்கள் தமிழரசுக்கட்சியினர். முள்ளிவாய்க்கால் வரை மட்டுமல்ல இன்றும் தொடரும் அழிவுகளுக்கு வித்திட்டவர்களும் அவர்களே.
தமிழீழக்கனவை இளைஞர்கள் மத்தியில் வெறித்தனமாக விதைத்து “சிங்களவர்களின் தோலில் செருப்புத்தைப்போம்.” என அருவருப்பான வெறியூட்டிய தமிழரசுக்கட்சியின் ஆயுத வடிவமாகவே இயக்கங்கள் தோன்றின. 30 வருடங்களாக தவறாக நடத்தப்பட்ட போராட்டத்தின் ஊற்றுமூலம் தமிழரசுக்கட்சியே! இன்றும் புலம்பெயர் நாடுகளில் பிழைப்பிற்காகப் பயன்படுத்தப்படும் சுலோகங்கள் தமிழரசுக்கட்சியிடம் இருந்து கடன் வாங்கப்பட்டவையே.
தமிழர்கள் பிரிந்து சென்று தனியரசு அமைக்க விரும்புகிறார்கள் அன்றி, இணைந்து வாழ விரும்புகிறார்களா எனத்தீர்மானிப்பதற்கு தமிழரசுக்கட்சி யார்?
இன்று பிரிந்து செல்லும் உரிமை என்பதை, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை என்பதைக்கூட கூறுவதற்கு அஞ்சும் ஏகாதிபத்தியங்களின் அடியாட்கள் இவர்கள். இலங்கை சிங்கள பாசிச அரசின் நீதிமன்றத்தில் தாம் உருவாக்கிய ஊழித்தீயில் கருக்கப்பட்டவர்களையெல்லாம் மறந்து பிரிந்து செல்லும் உரிமையக்கூட அடகு வைத்திருக்கிறார்கள்.
தமிழர்கள் தேசிய இனம் என்ற அடிப்படையில் பிரிந்து செல்லும் உரிமை கொண்டவர்கள்!
அவர்களுக்குப்பிரிந்து செல்லும் உரிமையை வழங்குவது இலங்கை அரசின் தவிர்க்க முடியாத கடமை. அந்த உரிமை வழங்கப்பட்டால் தமிழர்கள் பிரிந்து செல்வதற்குப்பதிலாக இணைந்து வாழவே விரும்புவார்கள். தேசிய இன ஒடுக்குமுறை தொடர்ந்தால் பிரிந்து செல்வதைத்தீர்மானிப்பதும் அவர்களின் ஜனநாயக உரிமை. தமிழர்கள் பிரிந்து சென்று தனியரசு அமைக்க விரும்புகிறார்கள் அன்றி இணைந்து வாழ விரும்புகிறார்களா எனத்தீர்மானிப்பதற்கு தமிழரசுக்கட்சிக்கோ, இலங்கை அரசிற்கோ எந்த உரிமையும் கிடையாது.
பிரிந்து செல்லும் உரிமையை வழங்க மறுக்கும் சிங்கள பாசிச அரசே பிரிவினையை ஊக்கப்படுத்துகிறது.
அடிப்படை உரிமையை வழங்க மறுக்கும் அரசின் நடவடிக்கை சரியானதே என்று சிங்கள மக்கள் மத்தியில் கூட நியாயப்படுத்தும் அளவிற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் காட்டிக்கொடுப்பு அமைந்துள்ளது. “அன்று சிங்களவனின் தோலில் செருப்புத்தைப்போம்” என்று வாக்குக்கேட்டவர்கள், “இன்று பாசிஸ்டுக்களின் செருப்பைத்தலையில் காவிச்செல்கின்றனர்.”
இன்று வரைக்கும் தமிழ்ப்பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்காக குரலெழுப்ப எந்த அரசியல் தலைமையும் அற்ற, வெற்றிடமாக்கப்பட்டுள்ள தமிழர்களின் அரசியல் தொடர்ச்சியான அழிவுகளுக்கே வழிகோலும்!!!
நன்றி,
-இனியொரு-
















