வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் கோவிலின் தேர் இனந் தெரியாதோரால் இன்று (12.10.2014) அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலயத்தின் பின்புறமாக பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரே இவ்வாறு எரிக்கப்பட்டு உள்ளதுடன் தேரின் கீழ் பகுதி அதிகளவாக எரியுண்டுள்ளது.
இன்று அதிகாலை பிரார்த்தனைக்கு சென்றவர்களே தேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் கதவு திறந்திருப்பதை கண்டதுடன் அதனுள் இருந்து புகை வருவதையும் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து தேர் நிறுத்தி வைக்கப்பட்டிரந்த பகுதியை சென்று பார்த்தபோது தேர் எரிந்து கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர். உடனடியாக நீரை கொண்டு தீயை கட்டுப்படுத்தியிருந்த போதிலும் தேரின் கீழ் பகுதி எரிந்துள்ளது.
ஆலயத்தின் நிர்வாகம் வவுனியா பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
















