சட்டவிரோத மீன்பிடித்தலை தடுக்காத இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. உலக நாடுகளில் சட்டவிரோத மீன்பிடித்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக இலங்கையுடனும் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தை நடத்தியது.
கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இப்பேச்சுவார்த்தையில் இலங்கையின் நடவடிக்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் கருதுகிறது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்ய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தடை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரக் கூடும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பிஜி, பனாமா உள்ளிட்ட நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆலோசனைகளை ஏற்று சட்டவிரோத மீன்பிடித்தலை ஓரளவு கட்டுப்படுத்தியுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
















