புலனாய்வு அமைப்புகளுக்கு இணையத் தாக்குதல்களை கையாளும் பயிற்சி

எதிர்காலத்தில் இணையத் தாக்குதல்களை கையாளும் வகையில் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்று, சிங்கப்பூரின் நயாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கற்கைகள் பேராசிரியர் றொகான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக நேற்று சாட்சியம் அளித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள் இணைய தாக்குதல் அச்சுறுத்தலை அங்கீகரித்து அவற்றைச் சமாளிப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளன. எனினும், சிறிலங்காவில் தயார்நிலை போதுமானதாக இல்லை.

சிறிலங்கா புலனாய்வு அமைப்புகளும் தொடர்புடைய நிறுவனங்களும் இணைய தாக்குதல்களைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

சிறிலங்கா புலனாய்வு அமைப்புகளுக்கு இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் தரவு சேகரிப்பதில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

தாக்குதல் நடத்துபவர்களின் சமூக ஊடக ஊட்டங்கள் மூலம், பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய தகவல்களை புலனாய்வு அமைப்புகள் பெற்ற உதாரணங்கள் பல உலகில் உள்ளன.

சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள் நவீன மயமாக்கப்பட்டு தயாராக இருக்க வேண்டும். இது ஒரு முக்கியமான துறை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!